கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தயாரிக்கும் LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா!

 

முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

LGM திரைப்படம் காமெடிக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகன் நாயகியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரத்தில் நதியா, யோகி பாபு மற்றும் ”மிர்ச்சி” விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி இருப்பதோடு, இசையும் அமைத்திருக்கிறார்.

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இப்படத்தின் தயாரிப்பாளருமான தோனி பேசும் போது,

நான் இப்படத்தைப் பார்த்து விட்டேன். இது மிகச் சிறப்பாக உருவாகி இருக்கிறது. நான் என் மகளோடு அமர்ந்து இப்படத்தைப் பார்த்தேன். அவள் என்னிடம் சில சந்தேகங்கள் கேட்டாள். அவளுக்கும் படம் பிடித்திருக்கிறது. இது ஒரு ஜாலியான திரைப்படம். மொத்தத்தில் அனைவரும் அவர்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.எனக்கு என் தயாரிப்பு அணியை பார்க்கும் போது பலம் வருவது போல் உணர்கிறேன். அவர்கள் இந்த தயாரிப்புப் பணியை கையாண்ட முறையைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.இயக்குநர் ரமேஷ் தமிழ்மணியும் ஒரு கட்டிடக்கலை நிபுணர் தான். என் மனைவி என்னிடம் படத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்று சொன்ன போது, நான் அவளிடம் சொன்னது ஒன்று தான். படத் தயாரிப்பு என்பது நீ நினைப்பது போல் வீட்டு சுவருக்கு வெள்ளையடிக்கின்ற விசயம் இல்லை. நீ முதலில் ஒரு கலர் அடிப்பாய், பின்னர் அது நன்றாக இல்லை என்று வேறு கலர் அடிப்பாய். பின்னர் தான் தோன்றும் முதல் கலரே இதைவிட நன்றாக இருந்தது என்று. பின்னர் நீ மீண்டும் முதல் கலரையே அந்த சுவற்றுக்கு அடிப்பாய். படத் தயாரிப்புப் பணியில் அப்படி செய்ய முடியாது. கதை என்ன, யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை நீயே முடிவு செய். இதை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துவிட்டால், பின்னர் எதைப் பற்றியும் யோசிக்காதே, அந்த வேலையை தொடங்கிவிடு, மற்ற எதைப் பற்றியும் கவலைப்படாதே என்று சொன்னேன். படக்குழுவினர் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடித்திருப்பதற்கு அதுவும் முக்கியமான ஒரு காரணம். நான் என் குழுவினரிடம் ஒரு விசயத்தில் உறுதியாக இருக்கும்படி கூறினேன். அது உணவு. நடிகர்களுக்கான உணவோ, அல்லது மொத்த படக்குழுவினருக்கான உணவோ, யாருக்கான உணவாக இருந்தாலும் அது உயர்ந்த தரமான உணவாக இருக்க வேண்டும் என்பது தான். நாங்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் எதிர்பார்ப்பது நல்ல தரமான உணவு மட்டும் தான்.

சாக்ஷி தோனி பேசியபோது,

இந்தப் படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் மற்றும் எங்களுக்கு தெரிந்த பல பேரின் வாழ்க்கையில் இப்படத்தில் வரும் சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருக்கிறது. அப்பொழுது தான் தோன்றியது ஏன் இதை ஒரு படமாக எடுக்கக்கூடாது என்று. இப்படித் தான் இப்படம் உருவானது.
இதனை தமிழில் எடுப்பதற்கு மிக முக்கியக் காரணம் என் கணவர் தோனி தான். நாங்கள் எல்லோருமே தமிழில் படத் தயாரிப்பு தொடங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு தான் இருந்தோம். ஏனென்றால் முதல்முறையாக படத் தயாரிப்பில் இறங்கும் போது ஒரு மிகப்பெரிய சப்போர்ட் வேண்டும். இது போன்ற ஒரு சிறப்பான துவக்கத்திற்கு சென்னை சரியான இடமாக இருக்கும் என்று தோன்றியது.

நடிகை நதியா பேசியபோது,

”அனைவருக்கும் வணக்கம்! தோனி கம்பெனியில் இருந்து அழைப்பு வந்த போது, பெண்களின் கிரிக்கெட் பிரிமியர் லீக்-காக தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். தோனி படம் எடுக்கிறார் என்பது ஆச்சர்யமாக தான் இருந்தது. ஒரு வேளை இது ப்ராங்க் போன்காலாக இருக்குமோ என்று கூடத் தோன்றியது. நான் அதிகமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு குடும்பப் பிண்ணனியில் இருந்து வந்தவள், என் கணவரின் உறவினர்கள் பலர் கிரிக்கெட் விளையாடுபவர்கள். பல கோடி மக்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு நபராக வழிகாட்டியாக இருந்து வரும் தோனி அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். LGM ஒரு ஜாலியான படம், இப்படம் உறவுகளை பற்றி பேசும். இப்படம் எல்லா உறவுகளுக்கும் ஒரு பாசிட்டிவ்-வான எனர்ஜியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி மிகச்சிறப்பான திறமை வாய்ந்தவர். அது போல் இப்படத்தின் கதைக்கரு மிகவும் தனித்துவம் வாய்ந்த்து. அதற்காக சாக்ஷி தோனிஷி அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ” என்று பேசினார்.