முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’!

பன்முக திறமையாளர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வழக்கமான சினிமாக்களில் இருந்து மாறுபட்டு, சமுதாயத்தை பிரதிபலிக்கும் சினிமாக்களை கொடுக்கும் முயற்சியில் எப்போதுமே இருப்பவர். இப்போது அவர் தனது அடுத்த படமான ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை, பசங்க புகழ் கிஷோர் மற்றும் விஜி சந்திரசேகர் மகள் லவ்லின் ஆகியோரை முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து இயக்கி வருகிறார். சென்னை வெள்ளத்தின் போது நடக்கும் ஒரு காதல் கதையான இந்த படத்தை, வித்தியாசமான ஒரு அணுகுமுறையுடன் வழங்குகிறார். ஆம், ஒரு தீவிரமான காதல் கதையாக இருந்தாலும், படத்தில் பாடல்கள் கிடையாது, சென்னை வெள்ளம் சார்ந்த எந்த ஒரு காட்சியும் இருக்காது. அதனாலே, கதை எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள இது உடனடி ஆர்வத்தை தூண்டும்.

“ஆரம்பத்தில், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இதே ‘ஹவுஸ் ஓனர்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை எடுக்கும் யோசனை எனக்கு இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் முதல் டிராஃப்ட் மட்டுமே தயாராக இருந்ததால், அது தொடங்கப்படவில்லை. இதற்கிடையில், நடிகர்கள் அவர்களின் கடமைகளில் பிஸியாகி விட்டனர், மேலும் அவர்கள் தற்போதைய படங்களை முடித்து விட்டு தான் திரும்ப வருவார்கள். இது தவிர, என் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘சொல்வதெல்லாம் உண்மை’யை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஸ்கிரிப்டை ‘ப்ளூ இன்க்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்தேன். ஜூன் 10ஆம் தேதி தொடங்க வேண்டிய படப்பிடிப்பு, ரியாலிட்டி ஷோ தற்காலிக தடை காரணமாக, முன்னோக்கி செல்ல எனக்கு தயக்கமாக இருந்தது. அதன் சேட்டிலைட் மற்றும் வெளிநாட்டு உரிமைகள் கூட உறுதி செய்யப்பட்டு விட்டன.மேலும், நான் நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ, அதை நான் எப்போதும் செய்திருக்கிறேன், அதைப் பற்றி கவலைப்படுவது தேவையற்றது என உணர்ந்தேன். சேனல் என்னை நன்றாக புரிந்து கொண்டது மற்றும் என் மனது சொல்வதை பின்பற்ற என்னை ஊக்குவித்தது. நாங்கள் “ஹவுஸ் ஓனர்” ஆரம்பித்தோம், “என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

முன்னணி நடிகர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் தலைப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிற ஆடுகளம் கிஷோர், இந்த படத்தை பற்றி என்னை போலவே உற்சாகமாக இருக்கிறார் அடுத்த வாரம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்குகிறது, மேலும் இரண்டு கட்ட படப்பிடிப்போடு, செப்டம்பர் மாதத்தில் முழு படத்தையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். மகளிர் மட்டும் புகழ் பிரேம் எடிட்டிங் செய்கிறார், கிருஷ்ணா சேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படத்துக்கு பின்னணி இசை மட்டும் தேவைப்படுவதால் முழு படப்படிப்பையும் முடித்துவிட்டு மட்டுமே இசையமைப்பாளரை உறுதி செய்வாராம் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.