கிராமத்து பெண் கனவு, ரசிகையாக உணர்ந்த தருணங்களை பற்றி கூறும் அர்த்தனா

நேர்மறை அதிர்வுகள் நாம் உதிர்க்கும் வார்த்தைகள் மூலமாகவும், உயர்வான கருணை மூலமும் நம்மை சுற்றியுள்ள இடங்களில் உணரப்படுகின்றன. நடிகை அர்த்தனா இவற்றையெல்லாம் தன்னுள்ளே கொண்டிருக்கிறார் அவரது சக நடிகர்கள் பற்றி பொழியும் பாராட்டு மழையால். கடவுளின் தேசம் கேரளாவில் இருந்து வந்திருக்கும் அர்த்தனா ஜிவி பிரகாஷ் நடித்துள்ள ‘செம’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இருக்கிறார். செம வரும் மே 25ஆம் தேதி வெளியாகிறது.

“ஜிவி பிரகாஷ் உடன் நடிக்கும் போது ஒரு சக நடிகையாக அல்லாமல், ஒரு ரசிகையாக அந்த தருணத்தை உணர்ந்தேன். அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன், இசையில் அவரது படைப்புகள் என்னை மிகவும் ஈர்த்தது. குறிப்பாக பின்னணி இசையில் அவர் ஒரு மாஸ்டர், நாங்கள் இப்போது நல்ல நண்பர்கள்” என்றார் அர்த்தனா.

‘செம’ படத்தில் அவரை ரொம்ப ஈர்த்தது என்ன?

“வள்ளிகாந்த் கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி அவள் பெயருக்கேற்றார்போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனர் வள்ளிகாந்துக்கு நன்றி”.

அவருடைய அடுத்த இரண்டு படங்களுமே கூட கிராமத்து படங்கள் தான். அவை கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த்தின் வெண்ணிலா கபடி குழு. “இந்த இரண்டு படங்களிலுமே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். என்னுடைய திரை வாழ்வை ‘செம’ தொடங்கி வைத்திருக்கிறது. மே 25ஆம் தேதி ரிலீஸுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன். திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். என்னுடைய அடுத்தடுத்த படங்களில் நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடிப்பேன்” என்றார் அர்த்தனா.