ரிச்சர்ட் ரிஷியின் ‘சில நொடிகளில்’ படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்!

 

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு சிறந்த திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும்.

‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு ரசிகர்கள் இதுவரை பார்த்திராத முற்றிலும் புதிதான ஒரு கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். லண்டனில் இருக்கக் கூடிய ஸ்டைலிஷான ஒரு காஸ்மெட்டிக் சர்ஜனாக இதில் வருகிறார். மலேசியாவில் வசிக்கும் திறமையான நடிகையும் ஆர்.ஜே.வுமான புன்னகை பூ கீதா ‘காவல்’, ‘மைதான்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

இயக்குநர் வினய் பரத்வாஜ் தமிழ் சினிமாவில் இயக்குநராக நுழைவதற்கு முன்பு கன்னட சினிமாவில் அவர் இயக்கிய ‘முண்டினா நில்டானா’ என்ற படம் பெரும் வெற்றிப் பெற்று ரசிகர்களின் இதயம் கவர்ந்தது. இதுமட்டுமல்லாது, ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகி ஹிட்டான சர்வதேச அளவில் புகழ்பெற்ற டாக் ஷோவான ‘ஸ்டார் டாக் வித் வினய்- சவுத் மீட் நார்த்’ ஷோவின் தொகுப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சில நொடிகளில்’ திரைப்படத்தின் கதை ராஜ் வரதனின் வாழ்க்கையை சுற்றி நடக்கிறது. அவனது மாடல் கேர்ள் ஃபிரண்டான மாயா பிள்ளை அதிக அளவு போதை மருந்து உட்கொண்டு பரிதாபமாக உயிரிழக்கும் போது இவனது வாழ்வு சிக்கலுக்குள்ளாகிறது. இதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன, எதிர்பாராத திருப்பங்கள், தனது மனைவி மேதா வரதனிடம் இருந்து அவன் என்ன ரகசியங்களைப் பெற்றான், அவனது வாழ்வு மீண்டும் இயல்புக்குத் திரும்பியதா போன்ற கேள்விகளுக்கு இந்தப் படம் பதில் சொல்லும்.

இஷான் ராஜாதிக்ஷா, எல்லே நவ், ஸ்ரீனிவாஸ் காஷ்யப் மற்றும் இயக்குநர் வினய் பரத்வாஜ் ஆகியோர் இந்தப் படத்திற்குத் திரைக்கதை எழுதியுள்ளனர். மேலும், அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவு செய்திருக்க, கலரிஸ்ட் சித்தார்த்தா காந்தி & எடிட்டர் ஷைஜல் பி வி ஆகியோர் சிறப்பான பணி செய்துள்ளனர். மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ மற்றும் ரோஹித் மாட் போன்ற புகழ்பெற்ற கலைஞர்களின் இசை படத்தின் வலுவான உணர்ச்சிகளுக்கு ஏற்ற ஆன்மாவைக் கொடுத்திருக்கிறது. புன்னகை பூ கீதா மற்றும் எஸ்குயர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சில நொடிகளில்’ உலகளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ‘மின்னலே’, ‘ஜீன்ஸ்’ & ‘அறிந்தும் அறியாமலும்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட், இத்திரைப்படத்தின் தயாரிப்பில் இருக்கிறது.

மாதவன், ஆர்யா & கௌதம் மேனன் போன்ற நட்சத்திரங்களின் திறமையை அடையாளம் கண்டு ஊக்குவித்த மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் அவர்களின் வரவிருக்கும் வெளியீடான ‘சில நொடிகளில்’ அற்புதமான கதைகளை கொடுப்பதற்கும் திறமைசாலிகளை மேலும் ஊக்குவிப்பதற்குமான தளத்தையும் உருவாக்கியுள்ளது. ‘வசீகரா’, தீப்பிடிக்க’ போன்ற பாடல்களின் வெற்றிக்குப் பிறகு, ‘சில நொடிகளில்’ படத்தின் ‘ஃபன் மாரோ’ ஒரு பெப்பி டான்ஸ் பாடல் மற்றும் பாரதியார் பாடலின் ரீமேக்கான ‘ஆசை முகம்’ ஆகியவை சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

’சில நொடிகளில்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் திரையரங்க அனுபவத்தினை மேன்மைப்படுத்தி பார்வையாளர்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கத் தயாராக உள்ளது.