குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும் ! ‘தூக்குதுரை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட்டில் நடிகர் சென்றாயன்!

ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் வழங்கும், டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. இதன் ப்ரீ-ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது.

 

நடிகர் சென்றாயன், “படத்தின் டைட்டில் ‘தூக்குதுரை’ போலவே படமும் ரொம்ப பாசிடிவாக, நன்றாக வந்துள்ளது. ஜனவரி 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர்கள், படக்குழுவினர் என எல்லாருமே தங்களது சிறந்த உழைப்பைக் கொடுத்துள்ளனர். இந்தப் படத்தின் மூன்று தயாரிப்பாளர்களும் நல்ல மனிதர்கள். ’பணத்தைச் சேர்த்து வைத்து படம் தயாரிக்க வந்துள்ளோம். நல்ல படம் வேண்டும்’ என இயக்குநரிடம் கேட்டார்கள். அதுபோலவே வெற்றிப் படத்தை இயக்குநர் கொடுத்துள்ளார். படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம். படத்தைத் திரையரங்குகளில் பார்த்து வெற்றி கொடுங்கள்”.

நடிகர் பால சரவணன், “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இந்தப் படம் எனக்கு முக்கியமான ஒன்று. படத்தின் தயாரிப்பாளர்கள் மூன்று பேருமே உதவி இயக்குநர்கள் போல, இந்தப் படத்திற்காக இறங்கி வேலைப் பார்த்தார்கள். யோகிபாபு, நான், சென்றாயன் என எல்லோருமே பரபரப்பாக ஒரே நேரத்தில் ஐந்து படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள்தான். எங்கள் காம்பினேஷன் காட்சியில் டேட்ஸ் பிரச்சினை வரும்போது, மற்ற பட இயக்குநர்களிடம் தன்மையாகப் பேசி பிரச்சினை வராமல் தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த்தான் ஒருங்கிணைத்தார்கள். சிறிய பட்ஜெட் படம் போல இல்லாமல், பெரிய பட்ஜெட் படத்திற்கு எப்படி செலவு செய்வார்களோ அதை எல்லாம் மறுக்காமல் தயாரிப்பாளர்கள் செய்தார்கள். படம் அவர்களுக்காகவே நிச்சயம் பெரிய வெற்றிப் பெறும்”.

நடிகர் சத்யா, “இந்தப் படம் நீங்கள் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் இருக்கும். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு நன்றி. பாலசரவணன், சென்றாயன் என அனைவருமே கல்லூரி நண்பர்கள் போல படப்பிடிப்புத் தளத்தில் அவ்வளவு கலாட்டா செய்வார்கள். அன்பு சார், மாரிமுத்து சார் நம்மோடு இல்லை. நிச்சயம் அவர்களுடைய ஆசீர்வாதம் நமக்கு இருக்கும். படத்தை எல்லோரும் திரையரங்குகளில் 25 ஆம் தேதி பார்த்து வெற்றிக் கொடுங்கள்”.

இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத்,

“தயாரிப்பாளர் அன்பு மற்றும் நடிகர் மாரிமுத்து எங்கள் படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயணித்தார்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்களோடு இல்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. படத்தை பிப்ரவரி 9 அன்று வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அதன் பிறகு நிறைய பெரிய படங்கள் இருக்கிறது என்பதால், சீக்கிரமாக எடுத்த முடிவு தான் இந்தப் பட ரிலீஸ். அதனால், படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரால் இன்று நிகழ்வுக்கு வரமுடியவில்லை. தயாரிப்பாளர்கள் அன்பு, அரவிந்த், வினோத் மூவரும் இந்தப் படத்திற்காக அவ்வளவு உழைத்துள்ளனர். கிராமம், நகரம் எனப் பல்வேறு லொகேஷனில் இந்தப் படத்தை எடுத்துள்ளோம். எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக நீங்கள் படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழு எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.