தனது 50 வது படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார் விஜய் சேதுபதி! குரங்கு பொம்மை படத்தின் இயக்குனரின் இரண்டாவது படம் !

 

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் & தி ரூட் ஜெகதீஸ் தயாரிப்பில் ‘குரங்கு பொம்மை’ நிதிலன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மஹாராஜா’ உருவாகி வருகிறது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் 7 ஸ்கிரின் ஸ்டுடியோ லலித் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்,

நடிகர் நட்டி பேசியதாவது,

“‘மஹாராஜா’ தமிழ் சினிமாவின் முக்கிய படமாக அமையும். இந்த படத்தின் திரைக்கதை இனி வரும் படங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். விஜய் சேதுபதியுடன் எனக்கு இது முதல் படம். படக்குழு அனைவரும் சிறப்பாக வேலை செய்தனர். நிதிலன் இன்னும் சில வருடங்களில் பான் இந்தியா படம் இயக்கும் அளவிற்கு பெரிய ஆளாக வருவார்”.

இயக்குநர் நிதிலன் பேசியதாவது,

” இந்த கதை மீது நம்பிக்கை வைத்து கடுமையாக உழைக்கும் என்னுடைய அணிக்கு நன்றி. படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட அபிராமி மேம், மம்தா மேம், அனுராக் கஷ்யப் சார் இவர்களுக்கும் நன்றி. விஜய் சேதுபதி அண்ணன் சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த மனிதர். அவரது ஐம்பதாவது படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம். நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கு மூன்று மடங்கு லாபம் தரக்கூடிய படமாக இதை உருவாக்குவேன்” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது,

“என்னை திட்டியும் வாழ்த்தியும் இந்த உயரத்திற்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பொறுமையும் அனுபவமும் ஒரு மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். அத்தகைய அற்புதமான அனுபவத்தை கொடுத்த என் இயக்குநர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி! இந்த படம் உங்களுக்கு பிடித்தது போல வந்திருக்கிறது. ஐம்பதாவது படம் என்பது நிச்சயம் என் சினிமா பயணத்தில் ஒரு மைல்கல். அது ஞானத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. என் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய புள்ளியை அருள் தாஸ் அண்ணன் வைத்துள்ளார். அவரைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும் வந்துள்ளது.

நட்டி சாரை பார்க்கும் பொழுது ரஜினி சாரின் அதே வேகம் ஈர்ப்பு அவரிடம் இருந்தது. பிலோமின், தினேஷ், அபிராமி, மம்தா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். நிதிலன் தயாரிப்பாளர்களின் பணத்தை எடுத்து தருவேன் என்று சொன்னது திமிர் கிடையாது, அவர் படத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை. அந்த அளவுக்கு சிறப்பாக படம் வந்திருக்கிறது. பாய்ஸ் மணிகண்டன் அவரின் சமீபத்திய பேட்டி ஒன்று பார்த்தேன். மாடர்ன் சாமியார் போல அவ்வளவு நம்பிக்கையாக பேசியிருந்தார். அவர் இன்னும் நிறைய உயரம் அடைய வேண்டும். அனுராக் சாரின் தயாரிப்பில் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது. ஆனால் இந்த படத்திற்காக அவர் செய்த வேலை மிக பெரியது. நானும் அவரும் இணைந்து இன்னும் நிறைய படங்கள் பணிபுரிய வேண்டும் என விருப்பம்” என்றார்.