ஐந்து வருடங்களில் டேனியல் மிகப்பெரிய உயரத்தில் இருப்பார் ! நடிகர் ராதாரவி புகழாரம்!

 

நடிகர் டேனியல் அன்னி போஃப்பின் நடிப்புப் பயிற்சிப் பட்டறையின் பாராட்டு விழா நிகழ்வு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்-பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் நடிகைகள் அபர்ணதி, அஞ்சனா கீர்த்தி  மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் டேனிஸ் பயிற்சி பட்டறையின் லோகோவை (Logo) நடிகர் ராதாரவி வெளியிட்டார். அதன்பின் ராதாரவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். மேலும் சிறப்பு விருந்தினர்கள் ராதாரவி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்கள். செங்களம் வெப் தொடர் குழுவினருக்கு ராதாரவி விருது வழங்கினார்.

நிகழ்ச்சியில் நடிகர் டத்தோ ராதாரவி பேசியதாவது,
இங்கே கூடி இருக்கும்  என் குடும்பத்தை சார்ந்தவர்களே, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கெல்லாம் என்னை அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் ஏதாவது ஏடாகூடமாகப் பேசுவேன், அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஏடாகூடமாப் பேசமாட்டேன். உள்ளதைச் சொல்வேன், நான் உள்ளதை சொல்வது உங்களுக்கு ஏடாகூடமாகத் தெரிகிறது. “டேய் நீ என்ன நல்லவனா..?” என்று கேட்டார் ராதாரவின்னு போட்டுவிடுவார்கள். ஏனென்றால் அப்படிப் போட்டால் தான் ஆடியன்ஸ் அதை க்ளிக் செய்து பார்க்கிறார்கள். அதை க்ளிக் செய்துவிட்டால் இவர்களுக்கு காசு. அதனால் இது போன்று வசீகரமான தலைப்பு வைத்து வரும் எந்த வீடியோக்களையும் நான் பார்ப்பது இல்லை.

பத்திரிக்கை நண்பர்களுக்கும் என் வணக்கங்களைக் கூறிக் கொண்டு, நான் உங்களிடம் கூற விரும்புவது இது ஒன்று தான்.  நீங்கள் எல்லாம் இது போன்ற சிறுசிறு அமைப்புகளின் செயல்பாடுகளை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும். இவர்களில் யாராவது எதிர்காலத்தில் ஒரு புரட்சித் தலைவரோ, நடிகர் திலகமோ இல்லை காதல் மன்னனாகவோ வரலாம்.. எல்லோரும் பெரிய பெரிய நிகழ்வுகளுக்குத் தான் வருவோம் என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது. ஒரு நாள் பெரிய இடம் சின்ன இடமாக மாறும், சின்ன இடம் பெரிய இடமாக மாறும். இதுதான் வாழ்க்கை. மேடையில் அமர்ந்திருக்கும் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் அவர்களுக்கும் வணக்கம். அவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவர் சொன்னார், அவர் இயக்கவிருக்கும் ஒர் வெப் சீரிஸ் ஒன்றில் என்னை நடிக்க வைக்கலாம் என்று நினைத்ததாகவும், பின்னர் சிலர் வேறு மாதிரி சொன்னதால் அதற்கான முயற்சி எடுக்கவில்லை என்றும் கூறினார். அதனால் தான் பிரபாகரனிடம் இனி நான் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் நீயே என் வீட்டுக்கு வந்துவிடு, நான் பத்து இலட்சம் கேட்பேன், நீ முடியாது ஒரு இலட்சம் தான் கொடுக்க முடியும் என்று கூறு, எதுவாக இருந்தாலும் நாமே பேசிக் கொள்வோம். அப்பொழுது தான் நான் என்ன பேசுகிறேன் என்பதாவது உனக்குத் தெரியும் என்றேன்.

தேன் படத்தின் நாயகி அபர்ணதி மற்றும் நடிகை அஞ்சனா கீர்த்தி ஆகியோருக்கும் வணக்கம். ஏன் நீங்கள் எல்லாம் நன்றாக யோசித்து வாயில் நுழையாத ஒரு பெயரையே சூட்டிக் கொள்கிறீர்கள் என்று தெரியவில்லை. சாவித்ரி, பத்மினி என்று பெயர் வைத்துக் கொண்டால் அழைப்பதற்கு எளிதாக இருக்கும். எடிட்டர் டான் பாஸ்கோ, ஸ்பான்சர் பிரவீண், அட்வகேட் கோகுலகிருஷ்ணன், அனைவருக்கும் வணக்கம். இது தவிர வேறு யார் பெயரையாவது விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.  உங்களை உதட்டளவில் மறந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் உள்ளத்தளவில் மறக்க மாட்டேன்.

இந்த நிகழ்விற்கு இடமளித்த பிரசாத் நிறுவனத்தாருக்கு நன்றி, இந்த நிகழ்வை டேனி பிரசாத் நிறுவனத்தில் நடத்துவது என்பது இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால் பிரசாத் என்பது ஒரு சகாப்தம்.  நான் இப்படி பேசுவதால் பிரசாத் நிர்வாகம் என் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகளுக்கு எந்த சலுகையும் வழங்காது. இந்தப் பள்ளி எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக கண்டிப்பாக வளரும்.  அதற்கு ஒரு காரணம் பிரசாத் நிர்வாகம் என்றால், மற்றொரு காரணம் டேனியின் தாய் இந்த நிகழ்விற்கு வந்திருப்பது. நானும் நாடகங்கள் நடிக்கும் காலத்தில் எல்லாம் என் தாயையும் உடன் அழைத்துச் செல்வேன்.என் வீட்டில் வந்து பாருங்கள். என் ஆதர்ச நடிகர்கள் ஒவ்வொருவரின் போட்டோவும் என் வீட்டில் இருக்கிறது. இந்த நடிகர்களின் போட்டோக்கள் வேறு எந்த நடிகர் வீட்டிலும் இருக்காது, இதை ஒரு சவாலாகவே கூறுகிறேன். நிறைய பேருக்கு அதில் இருப்பது யார் என்றே தெரியாது. ஒருமுறை நடிகர் விவேக் என் வீட்டிற்கு வந்த போது அவரால் பழைய நடிகர் சாரன் மணிபால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை. இப்படி முக்கியமான நடிகர்கள் போட்டோ என் வீட்டில் இருக்கிறது. அவர்களை கும்பிட்டுவிட்டு தான் நான் மேக்கப் போடத் துவங்குவேன். ஒரு முறை ஒரு புதிய பேச்சாளர் ஒருவர் என் வீட்டிற்கு வந்தார். அவர் இந்த போட்டோக்களைப் பார்த்துவிட்டு, இதெல்லாம் உங்களுக்குப் பிடித்த நடிகர்களா..? என்று கேட்டார். நான் இல்லை இவர்கள் எல்லாம் சரித்திர நடிகர்கள் என்று சொன்னேன். ஆக ஒருவரின் திறமையை மதிக்க வேண்டும். மரியாதை கொடுக்க வேண்டும்.

இந்த டேனியல் யார்..? அவனுக்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. தெரியவில்லை. ஏனோ பார்த்ததும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொண்டான். ஒரு படத்தில் நன்றாக நடித்திருக்கிறாய் என்று நான் அவனுக்கு போன் செய்தேன். அது மட்டுமே நான் செய்த தவறு. அவனுக்கு தெரிந்துவிட்டது, இவன் ஒரு இளிச்சவாயன் என்று, போனை பேசி முடிக்கும் போது வீட்டுக்கே வந்துவிட்டான். இப்படிதான் அவன் எனக்குப் பழக்கம். தியேட்டர் திறப்புவிழாவிற்கு அழைத்தான். எனக்கு தியேட்டர் எப்பொழுதுமே பிடிக்கும். ஏனென்றால் நான் கருவானதே அங்கு தான். நான் அவனிடம் கேட்டேன், எத்தனை பேர் தேர்வாகி இருக்கிறார்கள் என்று, அவன் 40 பேரில் ஒன்பது பேர் தேர்வாகியிருக்கிறார்கள் என்றான். இதுவே பெரிய வெற்றி தான்.

டேனியல் தொடங்கியிருக்கும் பள்ளி சிறப்பாக செயல்பட ஏதேனும் ஆலோசனை கொடுங்கள். நானும் கண்டிப்பாக அவனுக்கு ஆலோசனை கொடுப்பேன். உன் கைக்காசைப் போட்டு அதிகம் செலவு செய்யாதே என்று கூறுவேன். ஏனென்றால் நாளைக்கி இதிலிருந்து வரும் ஒரு மாணவனே பெரிய சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்றால், பழையதை மனதில் வைத்து நடந்து கொள்வார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவின் வியாதி அது.  டேனியல் நீ சோர்ந்து போகும் போது எனக்கு போன் செய். நான் எங்கிருந்தாலும் உன்னைத் தேடி வருவேன். நான் உன்னை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்வேன். உன் வளர்ச்சிக்கு உதவ நிறைய நண்பர்கள் உன்னோடு இருக்கிறார்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள். யாரும் தாய் தந்தையரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடாதீர்கள். அவர்கள் உங்களோடு இருப்பது தான் உங்களுக்கு ஆசிர்வாதம். குழந்தைகளை சுதந்திரமாகவும் அதே நேரம் கண்டிப்புடனும் வளருங்கள்.  இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் தமிழ் இனத்தில் சார்பாக நன்றி கூறி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் என்றார்.