தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பிறகு அவர் செய்யும் யாவும் வைரல் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் தனது தந்தையைப் போல் திரைப்படத்துறையில் நுழையத் திட்டமிட்டு இருந்தார். ஏற்கெனவே வெப் சீரிஸ்களை இயக்கத் தேவையான கதையை பிலால் சித்திக் என்பவருடன் சேர்ந்து ஆர்யன் கான் எழுதிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதமே தான் கதை எழுதிக்கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவர் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதனை ஆர்யன் கான் நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யன் கான் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் தனது தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது. பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்காக அந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டது. அந்த விளம்பரத்தில் நடிகர் ஷாருக்கான்தான் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்.

முக்கியமாக, ‘D’yavol’ என்ற பெயருடைய அந்த ஆடை நிறுவனத்தின் இணை நிறுவனரே ஆர்யன் கான்தான். இது தொடர்பாக தந்தை மற்றும் மகன் இரண்டு பேரும் தங்களது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். ஐ.பி.எல் போட்டிகளில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடும் போது ஷாருக்கானும், அவரது மகள் சுஹானாவும் எக்ஸ் முத்திரை பதித்த அந்த நிறுவன ஆடைகளை அணிந்து கொண்டுதான் போட்டியைக் கண்டுகளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.