இயக்கம்: ஜெயவேல் முருகன்
தயாரிப்பு: யாக்கை பிலிம்ஸ் மற்றும் யான் புரோடக்சன்
நடிகர்கள் : துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரில்லா, ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி,
மகேஸ்வரி
இசை: போபோ சசி
நகரத்தில் தண்ணீர் என்பது கடவுள், அப்படிபட்ட்ட குடி தண்ணீர் பற்றிய பின்னணியில் உருவாகியுள்ள படம் வருணன்
சென்னையில் , ராயபுரம் மற்றும் பகுதியில், தண்ணீர் கேன் விற்பனை செய்யும் இரண்டு தரப்ப்புக்கிடையே போட்டி ஏற்படுகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் மோதல் இல்லாமல் தொழில் செய்து வந்தாலும், அவர்களிடம் வேலை செய்யும் இளைஞர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுகிறார்கள். மறுப்பக்கம் காவல்துறை அதிகாரி தண்ணீர் கேன் நிறுவனத்தில் முதலீடு செய்து சம்பாதிக்க முயற்சிக்கிறார். இதன் காரணமாக, இரு தரப்பினருக்குமான தொழில் போட்டி, பெரும் பகையாக உருவெடுக்க, அதனால் அவர்களது வாழ்க்கை எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறது என்பது தான் ‘வருணன்’ படத்தின் கதை.
தண்ணீர் கேன் நிறுவனம் நடத்துபவர்களாக ராதாரவி மற்றும் சரண்ராஜ் நடித்திருக்கிறார்கள், அவர்களின் அனுபவம், திரையில் தெரிகிறது. நடிப்பில் மிகத் தனியாக தெரிகிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் கேப்ரில்லா இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பைத் தந்திருக்கிறார்கள். மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் பிரியதர்ஷன் மற்றும் ஹரிபிரியா ஜோடிக்கும் வழக்கமான வேலை தான் என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வில்லனாக நடித்திருக்கும் சங்கர்நாக் விஜயன் கவனம் ஈர்க்கிறார். ஜீவா ரவி, மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி என அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் சந்தோஷ், லைவ் லொக்கேஷன்களில் கேமராவை அருமையாக பயன்படுத்தி காட்சிகளை வேகமாக்கியிருக்கிறார் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கிய விதம் ஆச்சரியப்படுத்துகிறது.
இசையமைப்பாளர் போபோ சசியின் இசை பராவாயில்லை, என்.ரமணா கோபிநாத்தின் வசனத்தில் இருக்கும் ஆக்ரோஷமும், பில்டப்பும் திரைக்கதையில் இல்லை. திரைக்கதை தறிகெட்டு திரிகிறது.
படம் என்னவோ தண்ணி கேன் போடுவதை மையமாக வைத்தது என்றாலும் அதைப்பற்றிய தகவல்கள் சுத்தமாக இல்லை, கேன் பின்னணியில் இரண்டு இளைஞர்களின் காதல் மோதல் என சாதாரண கமர்ஷியல் படமாகத் தான் வந்துள்ளது. இயக்குநர் ஜெயவேல் முருகன் முதல் படத்தில் பாஸ் செய்துள்ளார்.
திரைக்கதையில் சதி கொலை மோதல் எதுவும் நமக்கு பாதிப்பைத் தருவதில்லை, திரைக்கதையை செழுமைப்படுத்தி வாழ்வியலோடு இணைத்திருந்தால், வருணன் புயலாக இருந்திருக்கும்