கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” விரைவில் திரையில்

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா M தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், மதுரை மற்றும் சென்னைப் பின்னணியில், ஒரு மாறுபட்ட கமர்ஷியல் கொண்டாட்டமாக உருவாகியுள்ள திரைப்படம் “கருப்பு பல்சர்”. இப்படத்தின் முழுமையாக முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டுவரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவும், அவரது படங்களில் திரைக்கதையிலும் பணியாற்றிய முரளி கிரிஷ் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மதுரை பின்னணியில் கருப்பு காளையுடன் வாழும் ஒரு இளைஞன், சென்னையில் பல்சருடன் வாழும் இளைஞன், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள், அதை எப்படித் தாண்டி வருகிறார்கள் என்பது தான் கதை. அசத்தலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன், அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

லப்பர் பந்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு மதுரை கிராமத்து இளைஞனாகவும், சென்னை மாடர்ன் இளைஞனாகவும் இரண்டு மாறுபட்ட தோற்றங்களில் அசத்தியுள்ளார் கெத்து தினேஷ்.

படம் குறித்து இயக்குநர் முரளி கிரிஷ் கூறியதாவது…
இதுவரையில் தமிழில் மிகச்சிறந்த இரட்டை வேடப் படங்கள் பல வந்திருக்கிறது. இந்தப்படம் அந்தப்படங்கள் போல இருக்காது. இப்படம் மக்கள் மனம் விட்டுச் சிரித்து மகிழும் வகையில் முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக இருக்கும், பொல்லவாதவன் பட கருப்பு பல்சர், ஜல்லிக்கட்டு போராட்டம் இந்த இரண்டும் தான் இப்படத்தின் கரு உருவாகக் காரணமாக இருந்தது. மதுரையின் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டைப் படத்தில் லைவ்வாக காட்டியுள்ளோம். இப்படத்தின் கதை கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் தினேஷ். இந்தப்படத்தில் அவரின் உழைப்பு அபாரமானது. இரண்டு நாட்கள் ஜல்லிக்கட்டில் உண்மையாகவே மாடுகளைப் பிடித்தார். அப்போது அவருக்கு அடிபட்டது அதையும் பொருட்படுத்தாமல் நடித்துத் தந்தார். சென்னை இளைஞனாகவும் கலக்கியிருக்கிறார். சென்னை, மதுரையில் 28 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம். லப்பர் பந்துக்குப் பிறகு ரசிகர்களுக்கு விருந்தாக இந்தப்படம் இருக்கும் என்றார்.

 

இப்படத்தில் தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கட், மதுனிகா நடித்துள்ளன்ர். இவர்களுடன், மன்சூர் அலிகான், கலையரசன் , சரவணன் சுப்பையா, பிரின்ஸ் அஜய், பிராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இன்பராஜ் ராஜேந்திரன் பாடல் எழுதி இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசி தாட்ச எடிட்டிங் செய்ய, T.உதயகுமார் சவுண்ட் டிசைன் செய்துள்ளார். KV. தமிழரசு, முருகானந்தம் நிர்வாக தயாரிப்பு பணிகளைச் செய்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், தற்போது திரைக்குக் கொண்டு வரும் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டிரெய்லர், மற்றும் இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.