ஆலன் படம் எப்படி இருக்கிறது ?

புதுமுக இயக்குநர் ஆர்.சிவா இயக்கத்தில் எட்டுத்தோட்டாக்கள் புகழ் வெற்றி நடித்திருக்கும் திரைப்படம் ஆலன்.

ஆன்மிகமும் காதலும் கலந்த வித்தியாசமான களத்தில் ஒரு கதை. இயக்குநர் நிறைய புத்தகமும் இலக்கிய நாட்டமும் கொண்டிருப்பார் போலும் அதை திரையில் கொண்டுவர ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் படத்தின் பட்ஜெட்டும், துணை நடிகர்களின் அமெச்சூர் நடிப்பும் படத்தை சராசரி படமாக்கியிருக்கிறது.

சிறு வயதில் விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்த நாயகன் வெற்றி, தன் மனப்போராட்டத்தில் இருந்து மீள்வதற்காக காசிக்கு சென்று அங்கிருக்கும் மடத்தில் சேர்ந்து ஆன்மீகத்தில் மூழ்க நினைக்கிறார். ஆனால், எழுத்தாளர் ஆக வேண்டும் என்று விரும்பும் அவரது மனது 10 வருடங்களாக முயற்சித்தும் ஆன்மீகத்தை ஆட்கொள்ள மறுக்கிறது. இதனால், தான் நேசிக்கும் எழுத்துலகை நோக்கிய தனது பயணத்தை தொடங்குகிறார். அப்போது அவருக்கு கிடைக்கும் ஒரு வெளிநாட்டு பெண்னின் நட்பு, அவரது பாலைவனம் போன்ற வாழ்க்கையை சோலைவனமாக மாற்றுகிறது. அதன் மூலம் துறவியாக சுற்றி திரிந்தவர் சக மனிதராக மாறி, தன் மனம் விரும்பும் எழுத்துலகில் இணைய முற்படும் போது, மீண்டும் ஒரு கசப்பான சம்பவத்தை எதிர்கொள்கிறார். அதன் மூலம் மீண்டும் திசை மாறும் வெற்றியின் வாழ்க்கை என்னவானது?, அவர் விரும்பிய எழுத்துலகில் அவர் சாதித்தாரா? இல்லையா? அவர் காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.

எப்போதும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் வெற்றி இப்படத்தில் தியாகுவாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு அவரால் முடிந்தளவு நியாயம் சேர்த்துள்ளார்
தியாகு கதாபாத்திரத்தை இயக்குநர் முடிந்த வரை நிறைவாக எழுதியிருக்கிறார். தியாகுவின் வாழ்க்கையில் குறுக்கிடும் ஜனனி தாமஸ் மற்றும் தாமரை ஆகிய இரண்டு பெண்களின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான கலைஞர்களை, நடிகைகளை தெரிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார், அதிலும் அந்த ஜெர்மன் பட்டென மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா ஆன்மிகமும் வாழ்க்கைத்தேடலுமான கதையை புரிந்து அதற்கேற்ற இசையை தந்துள்ளார்.

மனித வாழ்வில் பாசம், குரோதம், வஞ்சம், காதல், காமம், துறவறம் என்று எல்லா தளங்களிலும் பயணப்படும் திரைக்கதையை இலக்கிய வடிவில் அனுகியிருக்கிறார் இயக்குனர் ஆர்.சிவா. அவரே தயாரிப்பாளரும் ஆனதால் அவரது விருப்பப்படியே இந்தப் படம் திரைக்கு வந்திருக்கிறது.

ஒரு இலக்கிய புத்தகம் படித்த உணர்வைத் தருகிறது இந்த ஆலன்