ராஷ்டிரபதி பவன் நிகழ்ச்சியில் தெலுங்கு நடிகை சந்தியா ராஜு

மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு, இந்த வருடம் 2024ல் நடைபெற இருக்கும் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மதிப்புமிக்க ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பைப் பெற்றுள்ளார்.

தனது முதல் தெலுங்குத் திரைப்படமான ‘நாட்டியம்’ படத்திற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர் சந்தியா ராஜு. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தொழில்துறையின் தலைவர் தொழிலதிபர் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஹைதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலா ஃபிலிம்ஸின் நிறுவனராக சந்தியா ராஜூ உள்ளார். குச்சிப்புடியின் கிளாசிக்கல் நடன வடிவத்திற்கு ஜோதி கொடுத்து, அதை தனது நேரடி நிகழ்ச்சிகள், நடன அகாடமி மற்றும் சினிமா மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளார்.

ஒரு நடிகை, பாரம்பரிய நடனக் கலைஞர், தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என அவர் தொடர்ந்து இந்தியாவின் கலாச்சார கட்டமைப்பை ஊக்குவித்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரால் 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சிறப்புமிக்க நிகழ்வாக ’அட் ஹோம்’ நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15 மாலையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் கொடியேற்ற விழாவைத் தொடர்ந்து உடனடியாக இது தொடங்குகிறது.

மூத்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் உட்பட பல முக்கிய விருந்தினர்களை பாரம்பரிய உடையில் ஜனாதிபதி வரவேற்கும் முக்கியமான நிகழ்வாகும். இதில் விருந்தினர்கள் ஃபார்மல் மற்றும் செமி-ஃபார்மல் முறையில் உடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், இந்த நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்று கலந்து பேசுதல் மற்றும் சிற்றுண்டி ஆகியவை அடங்கும். விருந்தினர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், நாட்டின் சுதந்திரத்தை கௌரவமான அமைப்பில் கொண்டாடவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்திய வரலாற்றில் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்த பிரத்யேக நிகழ்வுக்கு அவரது அழைப்பானது, இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் சினிமாவில் ஒரு நடிப்பு கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், குச்சிப்புடியின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய பங்கையும் அங்கீகரிப்பதாகும்.

சந்தியா ராஜு தனது நன்றியைத் தெரிவித்து பேசியதாவது, “இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரால் அழைக்கப்படுவது எனது கௌரவமும் மரியாதையும் ஆகும். இந்த அழைப்பு இதுவரை நான் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அடையாளமாகவும் உள்ளது. குச்சிப்புடி நடனம் மற்றும் தெலுங்கு சினிமாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உயர்த்துவதற்கு என் நாட்டிற்கான பொறுப்பாகவும் இதை உணர்கிறேன். டெல்லியில் நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.