விஜயகாந்திற்கான கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம்! ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ்!

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,

நடிகை மேகா ஆகாஷ், “எல்லா படங்களுமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனால், இந்தப் படத்தில் லொகேஷன் புதுசாக இருந்தது. நடிப்பதற்கு போகும்போதே பாசிட்டிவாக மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி போன்ற திறமையான நடிகருடன் சேர்ந்து நடித்தது பெரிய கற்றல் அனுபவம். விஜய் மில்டன் சார் மற்றும் குழுவினருக்கு நன்றி”.

நடிகர் சத்யராஜ், “எம்.ஜி.ஆர். அய்யா மீது எந்தளவு மரியாதையும் அன்பும் நான் வைத்திருக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சிவாஜி சார் சினிமாவில் நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. ஆனால், அவர் ஆசைப்பட்டு நடிக்க முடியாமல் போன பெரியார் கதாபாத்திரம் எனக்குக் கிடைத்தது. அதைப்போல, எனது அருமை நண்பர் விஜயகாந்திற்கான கதாபாத்திரம் இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்தது என்னுடைய பாக்கியம். இதற்காக விஜய் ஆண்டனி, தனஞ்செயன், விஜய் மில்டன் மூவருக்கும் நன்றி. நல்லவேளை நான் முடியில்லாமல் பிறந்தேன். இதனால்தான் எனக்கு விதவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது. கட்டப்பா கிடைத்ததும் அப்படித்தான். சில மைனஸ்தான் பிளஸ். கடவுளுக்கு என்னைப் பிடிக்கும். ஏனெனில், அவரை நான் டிஸ்டர்ப் செய்வதில்லை. எல்லோரையும் போல, ‘என் படம் வெற்றி பெற வேண்டும், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என்று கெடுபிடி போட மாட்டேன். மற்றப் படங்களைப் போல அல்லாமல், நிஜமாகவே இந்தப் படம் நன்றாக இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு டிரேட் மார்க் இருப்பதுபோல, எனக்கு இருக்கும் நக்கல் திரையிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதோடு வில்லத்தனம் கலந்து வந்தால் இனி கொள்கையை தளர்த்தி வில்லனாக நடிக்கலாம் என்று நினைக்கிறேன். என் நடிப்புத் திறமைக்கு தீனி போட்ட பி. வாசு, பாரதிராஜா, எஸ்.பி. முத்துராமன் என எல்லா இயக்குநர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றி சொல்கிறேன்” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி, “பல மேடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எல்லாருமே இந்த மேடையில் எல்லோரும் பேசியிருப்பது கவிதை போல மனதில் இருந்து வந்திருக்கிறது. கொரோனா உள்ளிட்டப் பல விஷயங்களைத் தாண்டி விஜய் மில்டன் இந்தப் படத்தை கஷ்டப்பட்டு செய்திருக்கிறார். அவருடைய உழைப்பிற்காக இந்தப் படம் பெரிய வெற்றிப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். சத்யராஜ் சார், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலருடனும் நடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. சத்யராஜ் சாருக்கும் எனக்கும் நல்ல கனெக்‌ஷன் உள்ளது. மேகா ஆகாஷூக்கு நல்ல குரல் வளம் உள்ளது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் அவர் முயற்சி செய்யலாம். படக்குழுவினர் எல்லோரும் சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு பெரிய வெற்றிப் படமாக இது அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்”.