என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை! ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் சுந்தர்.சி!

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில்,

நடிகை தமன்னா பேசியதாவது…
சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார் வாழ்த்துக்கள். கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி

இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது…
அரண்மனை 4 சுந்தர் சி அண்ணாவுடன் ஆறாவது படம். என்னை இசையமைப்பாளராக, ஹீரோவாக அறிமுகப்படுத்தி என் மீது மிகப்பெரும் அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருக்கும் அண்ணாவிற்கு நன்றி. அரண்மனை 4 எல்லாப் படங்களையும் விடப் பிரம்மாண்டமான வெற்றி பெறும். தமன்னா, ராஷிகண்ணா இருவரும் மிக அழகாக இருக்கிறார்கள். படத்தில் அத்தனை அழகாக நடித்துள்ளனர். யோகிபாபு, சரளா மேடம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது…
எல்லோருக்கும் வணக்கம். அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே இந்தப்படத்தைத் துவக்கியுள்ளேன். இப்படத்திற்கும் பின் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது. நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அஸ்ஸாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம். நான் வேறொரு படத்தில் வேலை செய்த போது இந்த ஐடியா கிடைத்தது. இதில் வேலை பார்க்கலாமா? எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வருமென்றார் ?, அந்தப்பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன். என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். அரண்மனை முதல் மூன்று படங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கனும், பரிதாபமும் வரனும், குழந்தைக்கு அம்மாவாக வரணும், யாரை அணுகுவது என்று நினைத்தேன். ஆனால் தமன்னா கேட்டவுடன் ஒத்துக்கொண்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷிக்கண்ணா எனக்கு மிகவும் கம்ஃபோர்ட்டான ஆர்டிஸ்ட். என்னை முழுமையாக நம்புவார். இப்படத்தில் நன்றாகச் செய்துள்ளார். அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக்காரணம் காமெடி தான், அதை நிறைவேற்றனும். பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான், ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். அந்த வகையில் யோகி பாபு, சரளா மேடம், VTV கணேஷ், சிங்கம் புலி எல்லோரும் கலக்கியுள்ளார்கள். மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும்  வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி