உயிருள்ள வரை சினிமாவில் இருப்பேன்! மிரியம்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரேக உருக்கம்!

ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில்  அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் “மிரியம்மா..” நடிகை ரேகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார்,  அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார்.  மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள்.  ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள, யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நடிகர் எழில் பேசியதாவது,

சிறு முதலீட்டுப் படங்களே தேவை இல்லை என்று பேசிக் கொண்டு இருக்கும் போது, இந்த சிறு முதலீட்டுப் படத்திற்கு ஆதரவு தந்து இவ்வளவு பத்திரிக்கை நண்பர்கள் வந்திருக்கிறீர்கள்.  உங்களுக்கு நன்றி.  இப்படத்தின் இயக்குநர் மாலதி நாராயணன் ஒரு டாக்டர், அயர்லாந்தில் படித்து செட்டில் ஆனவர்.  அவர் இங்கு வந்து ஒரு தமிழ்ப்படத்தை இயக்கி தயாரித்து சிறப்பான முறையில் வெளியீட்டிற்கு கொண்டு வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அவர் வேலை செய்யும் வேகத்தைப் பார்த்தால் எனக்கு பிரமிப்பாக இருக்கிறது.  ஏ.ஆர்.ரெஹனா மேடத்தின் பாடல்களை படப்பிடிப்பில் ஒலிக்கச் செய்து, அதைக் கேட்டுக் கொண்டே தான் பாடல் படப்பிடிப்பு நடந்தது.  மிகச்சிறப்பான பாடல்களைக் கொடுத்த  அவருக்கு நன்றி.  அது போல் பின்னணி இசை அமைத்திருக்கும் மூன்ராக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்தப் படத்தின் கதை மிகவும் வித்தியாசம் ஆனது.  நீங்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார்.

 

நடிகை ரேகா பேசியதாவது,

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது.  இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அது போல் என் உயிரினும் மேலான என் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும்.  தமிழில் ஜெனிபர் டீச்சர்,  ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது. அது போல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன்.  செல்போனில் இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது.  இந்தப் படத்தில் நடிப்பதற்கு  வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் நன்றிகள்.

இப்படத்தில் நான் எழிலுக்கு தாயாக நடித்திருக்கிறேன். எங்களுக்குள் அந்த பாண்டிங் வந்தால் தான் காட்சிகள் இயல்பாகத் தெரியும். ஆனால் நான் பல படங்களில் நடித்த சீனியர் என்பதால் எழில் ஆரம்பத்தில் விலகியே இருந்தான்..  பின்னர் நான் அவனை “டேய் இங்க வாடா” என்று உரிமையாக அழைத்துப் பேசத் துவங்கியதும் எழில் இயல்பாகி விட்டான். காட்சிகளும் அருமையாக வந்திருக்கின்றது.சின்ன பட்ஜெட்டில் தொடங்கிய இப்படம் முடியும் போது பெரிய பட்ஜெட் திரைப்படமாக மாறிவிட்டது. இப்படத்திற்கு நீங்கள் ஆதரவு தந்து படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

இயக்குநர் மாலதி நாராயணன்  பேசியதாவது,

“இப்படம் தொடங்கும் போது நான், ஆஷிக் மற்றும் கேமராமேன் ஜேஷன் மட்டுமே இருந்தோம். இங்கு இருக்கும் அனைவரையும் இந்த புராஜக்டிற்குள் அழைத்து வந்தது ஆஷிக்கும் ஜேஷனும் தான். அவர்களுக்கு என் நன்றிகள்.  முதலில் நான் இப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தில் இல்லை. இயக்கவே விரும்பினேன். பின்னர் ஒரு சூழலில் இப்படத்தை தயாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு  தள்ளப்பட்டேன்.  இப்படத்தில் நிறைய நபர்கள் உள்ளே வந்துவிட்டுப் பின்னர் வெளியேறி இருக்கிறார்கள்.  ஒரு தயாரிப்பு நிறுவனம் கூட இப்படத்தை தயாரிக்க முன் வந்தது. ஆனால் படத்தின் பூஜைக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது, அந்நிறுவனம் காணாமல் போனது. எங்கு போனார்கள் என்றே தெரியவில்லை.  இன்னும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

அவர்கள் யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. அயர்லாந்தில் இருந்து வந்திருக்கிறார்கள். படத்தை எடுத்து முடிப்பார்களா..? பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளிநாடு சென்று விடுவார்களா…? என்று பல சந்தேகங்கள் அவர்களுக்கு. அவர்களால் எங்களை நம்பமுடியவில்லை. அவர்கள் இந்த புராஜெக்டை விட்டு வெளியேறியது ஒருவிதத்தில் நல்லது என்றே தோன்றுகிறது. அதனால் தான் எனக்கு என் மீதான நம்பிக்கை அதிகரித்தது.  என்னை நம்பி இவ்வளவு பெரிய அணி உருவாகி இருந்ததால் ஒரு கட்டத்தில் நானே தயாரிக்க முன் வந்து இப்படத்தை தயாரித்திருக்கிறேன். மீண்டும் படம் தயாரிப்பேனா என்று தெரியாது.  ஆனால்  கண்டிப்பாக படம் இயக்குவேன்.