தேசிய திரைப்பட விருது பெற்ற அல்லு அர்ஜுன் ! ‘புஷ்பா – தி ரைஸ்’ படத்திற்காக விருதை பெற்றார் !

‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுன் 69வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்று சரித்திரம் படைத்துள்ளார். ஆகஸ்ட் மாத இறுதியில் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று புது தில்லி, விஞ்ஞான் பவனில் பிரம்மாண்டமாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த வெற்றியின் மூலம், அல்லு அர்ஜுன் தனது நடிப்பு பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளார். நாட்டின் இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெறும் முதல் தெலுங்கு நடிகர் என்ற பெருமையை அல்லு அர்ஜூன் பெற்றுள்ளார். ஷெர்வானி ஜாக்கெட் அணிந்து, மிகவும் நேர்த்தியுடன் இந்த விருது விழாவிற்கு வந்தார் அல்லு அர்ஜூன். இந்த விழாவில் அவர் தனது மனைவி அல்லு சினேகா ரெட்டியுடன் கலந்து கொண்டார்.

2021 இல் வெளியான ‘புஷ்பா – தி ரைஸ்’ பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது மற்றும் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. அல்லு அர்ஜுனின் ‘புஷ்பராஜ்’ கதாபாத்திரம் இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் விரும்பப்படும் கதாபாத்திரமாக மாறியுள்ளது.

‘புஷ்பா’ பகுதி 1 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, ‘புஷ்பா 2 – தி ரூல்’ ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ‘புஷ்பா2’ ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடும் எனப் படக்குழு அறிவித்ததில் இருந்து, புஷ்பாராஜ் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.