சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் 3 விருதுகளை பெற்ற ‘கள்வா’ குறும்படம்

மர்யம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கள்வா’ குறும்படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச சல்சித்ரா ரோலிங் திரைப்பட விருது விழாவில் சிறந்த திரில்லர், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர் ஆகிய நான்கு விருதுகளை ‘கள்வா’ படம் வென்றுள்ளது. இதேபோல் கொல்கத்தாவின் 6வது சர்வதேச பயாஸ்கோப் திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் படம், சிறந்த திரில்லர், சிறந்த ஒளிப்பதிவாளர் ஆகிய 3 விருதுகள் ‘கள்வா’வுக்கு கிடைத்திருக்கிறது.

பக்கிங்கம்ஷெர் நாட்டிலுள்ள ஃபர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிட ‘கள்வா’ தேர்வாகியுள்ளது. மும்பை சர்வதேச குறும்பட விழாவுக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச பட விழாவுக்கும் திரையிட தேர்வாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் லிஃப்ட் ஆஃப் பிலிம்மேக்கர் செஷன் திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியிருக்கிறது. இதேபோல் மான்செஸ்டரில் ஃபர்ஸ்ட் டைம் ஃபிலிம் மேக்கர் செஷனிலும் திரையிட நடுவர் குழு தேர்வு செய்திருக்கிறது. மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கும் ‘கள்வா’ அனுப்பப்பட்டுள்ளது.

இந்த குறும்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி ஜியா இயக்கியுள்ளார். ஜேட்ரிக்ஸ் இசையமைத்திருக்கிறார். ஷரண் தேவ்கர் சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அப்சல் கதை எழுதியிருக்கிறார். பிரேம் எடிட்டிங் செய்துள்ளார். விரைவில் இப்படம் யூடியூபில் வெளியாக உள்ளது.