விஜய் சேதுபதியுடன் செல்ஃபிக்காக படப்பிடிப்பு தளத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெற்று வரும் தளத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை சந்திக்க மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இவருடன் யோகி பாபு, ருக்மணி வசந்த், பி. எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர் கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ. கே. முத்து மேற்கொண்டிருக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 Cஸ் என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில், இயக்குநரான பி. ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு  முதற்கட்டமாக மலேசிய நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு தினசரி உள்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் படப்பிடிப்பனை பார்வையிடுவதுடன், படத்தின் நாயகனான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர், சுற்றுலா பயணிகளையும், விஜய் சேதுபதியின் ரசிகர்களையும் கட்டுப்படுத்த தெரியாமல் தவிக்கின்றனர்.