வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி இணைந்து திறந்து வைத்த இயக்குனர் அமீரின் ஹோட்டல்

‘மெளனம் பேசியதே’ படம் மூலமா கோலிவுட்டில் டைரக்டரா அறிமுகமானவர் இயக்குநர் அமீர். அதன் பின்னர் நடிகர் ஜீவாவை வைத்து ‘ராம்’ படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அந்தத் திரைப்படத்தை தயாரித்ததின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.அதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்தியை அறிமுகப்படுத்தி ‘பருத்தி வீரன்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்ட அமீர் அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார்.

இதனிடையே ‘யோகி’ படத்தில் நடிகராக களம் இறங்கிய அமீர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக வடசென்னையில் இவர் ஏற்று நடித்த ராஜன் கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கடைசியாக இவரது இயக்கத்தில் ‘ ஆதி பகவன்’ என்ற திரைப்படம் வெளியானது. ஜெயம்ரவி இரட்டை வேடங்களில் நடித்த இந்தத்திரைப்படம் தோல்வி அடைந்தது . தற்போது வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதிய ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில் இயக்குநர் அமீர் புதியதாக ஹோட்டல் ஒன்றை திறக்கவிருப்பதாக அறிவித்து இருக்கிறார். அந்த ஹோட்டலுக்கு 4 am coffee & kitchen என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “ நண்பர்களுடன், குடும்ப உறவுகளுடன், காதல் இணையுடன் கலந்துரையாடுவது எப்போதும் இனிமையானதே. அதற்கு அமைதியான இடமும் சூழலும் இனிமையான பானங்களும், உணவு வகைகளும் முக்கியமானது.

அந்த வகையில் சென்னை பெருநகரில் மற்றுமோர் மையமாக கிழக்கு கடற்கரை சாலையில், உத்தண்டி டோல் கேட் மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே என்னுடைய “ 4 am coffee & kitchen” எனும் நிறுவனத்தை இன்று (ஜூன் 2, 2023) மாலை 7 மணியளவில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.