சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமிர் கான் இணையப்போகும் படம் !!

‘லால் சிங் சத்தா’ படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள ஆமிர் கான் படங்களில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்கிறார். தனது குடும்பத்தோடு நேரத்தைச் செலவிட இந்த பிரேக் தேவைப்படுகிறது என்று ஆமிர் கான் தெரிவித்திருந்தார். அதோடு நடிகர் சல்மான் கானை வைத்து ‘சேம்பியன்ஸ்’ என்ற படத்தைத் தயாரிப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார்.

பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமிர் கான் ஆகியோர் அசைக்க முடியாத சக்திகளாக இருக்கின்றனர். அவர்கள் இடையே தற்போது நல்ல உறவு நீடித்து வருகிறது. சமீபத்தில் மூன்று பேரும் நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆமிர் கான் எப்போதும் சொன்ன சொல்லைக் காப்பாற்றக்கூடியவர். அவர் சொன்னபடி சரியான நேரத்திற்கு வந்துவிட்டார் என்கிறார்கள். ஆனால் ஷாருக்கானும், சல்மான் கானும் ‘டைகர் 3’ படப்பிடிப்பிலிருந்தனர். படப்பிடிப்பை முடித்துவிட்டே இருவரும் வந்திருக்கின்றனர். அதன் பின்னர், அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து நீண்ட நேரம் மனம் விட்டுப்பேசியதாகச் சொல்லப்படுகிறது. மூவரும் சேர்ந்து பார்ட்டி கொண்டாடிக்கொண்டே பல்வேறு பிரச்னைகள் குறித்தும் விவாதித்திருக்கின்றனர். ஒவ்வொருவரின் வேலை, மகிழ்ச்சி, துக்கம், தோல்விகள் உட்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் பேசியிருக்கின்றனர். இதில் ஷாருக்கானும், சல்மான் கானும் சேர்ந்து ஆமிர் கானிடம் தற்போது எடுத்திருக்கும் பிரேக்கை முடித்துக்கொண்டு விரைவில் மீண்டும் நடிக்க வரும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Opinion: The Shah Rukh, Salman & Aamir Khan Reunion Was Everything It  Shouldn't Have Been!

அதற்கு ஆமிர் கான், தன் அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளைப் படித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானிடம் தன்னுடன் ஐரோப்பா அல்லது அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் வரும் படியும் ஆமிர் கான் கேட்டுக்கொண்டுள்ளார். மூவரும் சேர்ந்து செல்வதற்கு இதுவே சரியான நேரம் என்றும், வேலை அதிகமாகிவிட்டால் செல்ல முடியாது என்றும் ஆமிர் கான் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இதோடு மக்களின் ரசனைக்குத் தக்கபடி எந்த மாதிரியான படங்களில் நடிப்பது என்பது குறித்தும் மூவரும் பேசியுள்ளனர்.

மேலும் ‘சேம்பியன்ஸ்’ படத்தை எப்போது ஆரம்பிக்கலாம் என்பது குறித்தும் சல்மான் கானிடம் ஆமிர் கான் கேட்டறிந்திருக்கிறார். ஷாருக்கான், தான் அடுத்து நடிக்கவிருக்கும் ‘டங்கி’ படம் குறித்து இருவரிடமும் விவாதித்திருக்கிறார். ஆமிர் கான் வழக்கமாக இரவில் விரைவிலேயே தூங்கச்சென்றுவிடுவது வழக்கம். ஆனால் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானுடன் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை என்கிறார்கள்.