‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ளது

இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் படத்தின் டைட்டில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்.
தற்போது, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என அறிவித்துள்ளது. நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது இதன் பொருள். இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து வகையான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பு என்பது முக்கியமானது. இதன் பொருட்டே, ‘கங்குவா’ என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்குமாக இறுதி செய்யப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தினை ஸ்டுடியோ கிரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
இயக்குநர் சிவா மற்றும் அணியினர் இந்தப் படத்தை எழுதி இயக்குகின்றனர். இந்தப் படத்திற்கு வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். ’ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை மிலன் கையாள, படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனிக்கிறார். படத்திற்கு சண்டைப் பயிற்சி சுப்ரீம் சுந்தர், வசனங்களை மதன் கார்க்கி எழுதி இருக்கிறார். கதை சிவா மற்றும் ஆதி நாராயணா. பாடல் வரிகளை விவேகா மற்றும் மதன் கார்க்கி எழுதி இருக்க ஆடை வடிவமைப்பை அனுவர்தனும் ஆடைகளை ராஜனும் கவனிக்கின்றனர். ஒப்பனை குப்புசாமி, நடனம் ஷோபி மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிகின்றனர்.

இந்தப் படம் கோவா, சென்னை மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் மீதமிருக்கும் படப்பிடிப்பும் வரும் மாதங்களில் முடிந்துவிடும். வலிமை மிக்க கதாநாயகனின் பல்வேறு அவதாரங்களை இந்த ஆக்‌ஷன் எண்டர்டெயினர் திரைப்படம் 3டியில் காட்ட இருக்கிறது. இது அனைத்துவிதமான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையில் அமையும்.
படத்தில் பல ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளது. விஎஃப்எக்ஸ் மற்றும் சிஜிஐ காட்சிகள் உயர்தரமாக இருக்க வேண்டும் என்பதால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால், திரைப்படம் 2024-ம் வருடத்தின் ஆரம்பத்தில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாகும் தேதி, படப்பிடிப்பு முடிந்ததும் அறிவிக்கப்படும். தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பல்வேறு ஊடகங்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள்கள், வால் போஸ்டர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஒரே நேரத்தில் தங்களுடைய படத்தின் தலைப்பை இன்று அறிவித்தனர்.

படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சிவா தெரிவிக்கையில், ‘’சூர்யா 42’ படத்தின் தலைப்பை ’கங்குவா’ என அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். திரையில் நெருப்பின் வீரமும் வலிமையும் கொண்ட ஒரு கதாநாயகனாக நடிகர் சூர்யா இருப்பார். கம்பீரமான, தனித்துவமான அதே சமயம் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு கதையாக இது பார்வையாளர்களுக்கு அமையும். படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவிப்போம்” என்றார்.