” அருவா சண்ட ” படத்திற்கு தேசிய விருது நிச்சயம் தயாரிப்பாளர் கேயார் நம்பிக்கை

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘அருவா சண்ட’. ‘சிலந்தி’, ரணதந்த்ரா( கன்னடம்), இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

டிசம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் ஆதிராஜன் பாடல்களை எழுத, தரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி தானு பாடல்களை வெளியிட, தயாரிப்பாளர்கள் முரளி இராமநாராயணன், கேயார், கே.ராஜன், அசோக்சாம்ராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா பேசியதாவது:-

“இந்தப்படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். உயிரை கொடுத்து இந்த விழாவை நடத்துகிறோம். தயாரிப்பாளர் அண்ணன் கே.ராஜன் சினிமா விழாக்களில் பேசும்போது “படத்தின் ஹீரோயின் ஏன் விழாவில் கலந்துகொள்ளவில்லை” என்று ஒவ்வொரு மேடையிலும் பேசுவார். ஹீரோயின்கள் மட்டுமல்ல, அம்மா கேரக்டர்களில் நடிப்பவர்களும் கலந்துகொள்வதில்லை. இந்தப்படத்தில் அம்மா கேரக்டரில் நடித்திருக்கும் சரண்யா பொண்வண்ணன் மேடத்திடம் காலில் விழாத குறையாக விழாவுக்கு அழைத்தும் மறுத்துவிட்டார். இதே பெரிய படம், பெரிய தயாரிப்பாளர் என்றால் அந்த நிகழ்ச்சிக்கு போயிருப்பார். சிறிய பட தயாரிப்பாளர்களை கேவலமாக நினைக்கிறார்கள். இந்தப் படத்திற்காக நிறை கஷ்டப்பட்டிருக்கிறேன்; காயப்பட்டிருக்கிறேன். கண்ணீரில் ரத்தம் மட்டும்தான் வரவில்லை. என்போன்ற தயாரிப்பாளர்கள் படத்தின் ரிலீசுக்காக போராடுகிறார்கள். அவர்களுக்காக சப்போர்ட் பண்ணுங்க. சாதாரணமாக கலைத்துறைக்கு வருகிறவர்களை கலைத்துறையில் உள்ளவர்களே நசுக்கிவிடுகிறார்கள். தயவு செய்து சிறு தயாரிப்பாளர், பெரிய தயாரிப்பாளர், புதியவன், பழையவன் என்று பாரபட்சம் பார்க்காதீர்கள். மற்றபடி இங்கு வந்திருந்து வாழ்த்திய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி தானு பேசியதாவது:-

“படத்தின் தயாரிப்பாளர் வி.ராஜா ஆர்வமான இளைஞர். கபடி வீரர் கேரக்டரில் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தின் பாடல்கள், காட்சி அமைப்புகள், வசனம் எல்லாம் சிறப்பாக வந்துள்ளது. ஆதிராஜன் துல்லியமாக இயக்கியிருக்கிறார். புவியிலே செந்தேன் மழை, செவியிலே தரனின் சங்கீத அலை என்பதுபோல் தரணின் இசை நன்றாக வந்துள்ளது. தயாரிப்பாளரும் படத்தின் நாயகனுமான வி.ராஜாவின் வரவு தமிழ்சினிமாவுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தப் படம் மாபெரும் வெற்றிபெற எனது வாழ்த்துகள்”என்றார்.

கே.ராஜன் பேசியதாவது:-

“எவன் ஒருவன் வருமானத்தை இழந்து தன்மானத்திற்காக போராடுகிறானோ அவன் சண்டை போடுவான். இந்த விழாவிற்கு சரண்யா பொன்வண்ணன் வரவில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் ராஜா கலங்கினான். அவங்க வராததற்கு நீ கவலைப்பட தேவையில்லை. படத்தின் ஹீரோயின் ஏன் வரவில்லை? ஈ ஓட்ட போய்ட்டாங்களா? 3 கோடிக்கு மேல் செலவு செய்து இந்தப்படத்தை எடுத்திருக்காங்க. ஆனால் கடைசி நேரத்தில் 10 லட்சம் இல்லாமல் கஷ்டப்பட்டாங்க. வி.ராஜா வேகமானவன் விவேகமானவன். நட்புக்கு இலக்கணம் அவன். நட்புக்காக உயிரையும் கொடுப்பவன். சினிமா உலகத்துக்கே தயாரிப்பாளர் சங்கம்தான் முதன்மையானது. அது சரியாக இருந்தால் ஒருபய வாலாட்ட முடியாது. காட்டில் சிங்கம், புலி, மான் எவ்வளவு இருக்குன்னு கணக்கெடுப்பு நடத்துவது உண்டு. எதாவது குறைந்துவிட்டால் நிதி ஒதுக்கி அந்த இனத்தை இனப்பெருக்கம் செய்ய வைப்பார்கள். ஆனால் அழைந்துகொண்டு வரும் தயாரிப்பாளர்கள் இனத்தை காப்பதற்கு ஆள் இல்லை. அதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்.
படத்தின் இயக்குனர் ஆதிராஜன் பத்திரிகையாளராக இருந்தபோது நிறைய கட்டுரைகள் எழுதியவர். என்னை உணர்ச்சிவசப்பட வைத்து ஊக்குவித்தவர். இந்த படம் வெற்றி பெற்றல் 100 தயாரிப்பாளர்கள் உள்ளே வருவார்கள். வி.ராஜா மாதிரியான ஆள் தயாரிக்காமல் நடிப்பதோடு நிறுத்திக்கொண்டால் 15 பெண்கள் உன்னை கடிப்பிடிக்க தயாராக இருப்பார்கள். அவ்வளவு ஹேன்சமா இருக்கிறாய். இந்த சினிமா உன்னை வாழவைக்கும்.”என்றார்.

தயாரிப்பாளர் முரளி இராமநாராயணன் பேசியதாவது:-

”படத்தின் பாடல்களை பார்த்தோம். தரணின் இசை அருமையாக இருக்கிறது. குறிப்பாக அம்மா பாடல் நன்றாக வந்திருக்கிறது. கபடி பற்றிய இந்த படம் தேவையான படம். இயக்குனர் ஆதிராஜன் நன்றாக திரைக்கதை பண்ணக்கூடியவர். அதனால் படமும் சிறப்பாக வந்திருக்கும். தயாரிப்பாளர் ராஜாவுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்களை நம்பி படத்தை ஆரம்பித்தீர்கள். அதனால் உங்கள் நம்பிக்கை ஜெயிக்கும். இந்தப்படம் வெற்றிபெற இறைவனை வேண்டுகிறேன்”என்றார்.

தயாரிப்பாளர் கேயார் பேசியதாவது:-

“இயக்குனர் ஆதிராஜன் என்னுடைய நீண்டநாள் நண்பர். நிறைய போராட்டத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். படம் ஜெயிப்பதற்கான நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கிறது. ராஜா, புதுமுக நடிகர், தயாரிப்பாளர். ரொம்ப தைரியமாக இருக்கிறார். அது இருக்கவேண்டும். சில மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். சிலர் எப்படியும் வாழலாம் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு பிரச்சினை இருக்கும். ஆதிராஜன் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் அவர் பிரச்சினைகளை சந்தித்தார். இனி அவருக்கு அந்த இயற்கையே சப்போர்ட் பண்ணும். ஆதிராஜன் பத்திரிகையாளராக இருந்தபோது யாரிடமும் கைநீட்டியதில்லை.
ராஜா போன்ற தயாரிப்பாளர்கள் கிடைப்பதும் கஷ்டம். நண்பர் அசோக் சாம்ராஜ் இந்தப் படத்தை வெளியிடுகிறார். படம் நிச்சயமாக வெற்றி பெறும். நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காகவே தேசிய விருது கிடைக்கும். அவார்டு மட்டுமின்றி ரிவார்டும் கிடைக்கும்”என்றார்.

May be an image of 6 people, beard, wrist watch and text

விழாவிற்கு வந்தவர்களை இயக்குனர் ஆதிராஜன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். நடிகர்கள் செளந்தர்ராஜா, அபிசரவணன், தயாரிப்பாளர் ரிஷி ராஜ், இசையமைப்பாளர் தரண்குமார் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்