பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.

நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக நடிக்கும் ‘தடை உடை’ என்ற புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கவி பேரரசு வைரமுத்து, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினரும் கலந்துகொண்டனர்.

அறிமுக இயக்குநர் என். எஸ். ராகேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘தடை உடை’. இதில் நடிகர் சிம்ஹா கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை மிஷா நராங் நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, செந்தில், ரோகிணி, சரத் ரவி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டெமல் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆதிஃப் இசை அமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, சண்டைக்காட்சிகளை கணேஷ் அமைக்கிறார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் தயாராகும் ‘தடை உடை’ படத்தை முத்ராஸ் பிலிம் பேக்டரி மற்றும் ஆருத்ரா பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி. ராஜசேகர் மற்றும் ரேஷ்மி சிம்ஹா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இதற்கான தொடக்க விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 5ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிம்ஹா கதையின் நாயகனாக தயாரித்து நடிப்பதாலும், படத்தின் தலைப்பு ‘தடை உடை’ என எளிய மக்களையும் கவரும் வகையில் அமைந்திருப்பதாலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு, தொடக்க நிலையிலேயே ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.