சென்னையின் அசைவப்பிரியர்களுக்கு மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு

ராஜா மற்றும் பிரசன்னா இளம் தொழில் முனைவோர்கள், சாப்ட்வேர் மற்றும் வணிகம் என்று வெவ்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், சேர்ந்து ஒரு நல்ல உணவகம் ஆரம்பிக்கவேண்டும் என்கிற எண்ணத்துடன் இணைந்திருக்கிறார்கள்.

மதுரைக்கே உரித்தான மண்ணின் கமழும் சுவையை அதன் தரம் குறையாமல் சென்னை மக்களுக்கு தரும் பொருட்டு, ‘மதுரை ராஜாம்மாள் கறிக்குழம்பு’ எனும் பெயரில் உணவகம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அஜினமோட்டோ, ஐயோடின் உப்பு, பாக்கெட் மசாலாக்கள் மற்றும் ஊசிபோட்டு வளர்க்கப்பட்ட பிராய்லர் கோழிகள் இல்லாமல், வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா, செக்கு எண்ணெய், இமாலயா உப்பு, நாட்டுக்கோழி, விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கிய ஆட்டின் இறைச்சி மற்றும் எருமைப்பாலில் தயாரித்த தயிர் என்று அமர்க்களப்படுத்தவிருக்கிறார்கள்.

ஜிகிர்தண்டா பிரியர்களுக்காக மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட ஜிகிர்தண்டா இந்த கறிக்குழம்பு உணவகத்தில் கிடைக்கும்.

இதுகுறித்து ராஜா மற்றும் பிரசன்னா கூறும் போது, ” தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் சென்னையில் பணிபுரிபவர்கள் தங்கள் வீட்டுச்சாப்பாடு சாப்பிட வேண்டும் என்றால் எங்கள் உணவகத்திற்கு வரலாம்.

சென்னை அசைவ பிரியர்களுக்கும், எங்களது சுவை மிகவும் பிடிக்கும்..” என்றார்.

சென்னை, நீலாங்கரையில் அமைந்துள்ள இந்த உணவகத்தின் தொடக்க விழாவில் வெளிச்சம் டிவி இயக்குநர் பாபு, அதிமுக வைச் சேர்ந்த மதிவாணன், காவல் ஆய்வாளர்கள் நடராஜன், ரியாஸுதின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.