துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!

சிறந்த நுட்பமான நடிப்பு, வழக்கத்திற்கு மாறான ஆச்சரியங்கள், கணிசமான நல்ல படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பெயர் துல்கர் சல்மான். அப்பழுக்கற்ற அடையாளங்களோடு இருக்கும் துல்கர், இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்திழுக்க இந்த விஷயங்களும் முக்கிய காரணம். கேரளாவில் கொண்டாடப்படும் நடிகராக இருந்தாலும், அவரது 25வது படமான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ தமிழ்ப் படமாக அமைந்திருப்பது கோலிவுட்டுக்கு பெருமை. 6 வருடங்களில் 25 பேசப்படும் படங்களில் நடித்திருக்கும் ஒரு திறமையான நடிகரை பாராட்ட, ஸ்டைலிஷ் படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்த கௌதம் மேனனை தவிர யாரால் முடியும். அப்படிப்பட்ட இயக்குனர் கௌதம் மேனன் தான் துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் லோகோவை இன்று மாலை 6:25 மணிக்கு மகிழ்ச்சியோடு வெளியிடுகிறார்.

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த சர்ப்ரைஸை வெளியிட இது தான் சரியான நேரம். திரைத்துறையில் துல்கர் சல்மான் 6 வருடங்களை நிறைவு செய்திருக்கும் இந்த வேளையில், ரிது வர்மாவுடன் இணைந்து நடித்திருக்கும் அவரின் 25வது படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகிறது. இன்னும் பல ஆச்சர்யங்களும் காத்திருக்கின்றன” என குறிப்பிட்டிருக்கிறார்.

ரொமாண்டிக் படமாக உருவாகி வரும் இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். ஃபிரான்சிஸ் தயாரிக்கிறார்.