மன்னர் வகையறா விமர்சனம்

மூன்று குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பாசம், மோதலை காமெடியாக சொல்லும் படம். பிரபுவுக்கு கார்த்திக், விமல் என இரண்டு மகன்கள். இருவரும் ஜெயப்பிரகாஷ் – சரண்யா தம்பதிகளின் இரு மகள்களையும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் காதலிக்கின்றனர். பிரபுவின் ஊரில் இறால் பண்ணை நடத்தி வந்த, சரண்யாவின் அண்ணன் மகனை விமல் அடித்துவிடுகிறார். அவரை பார்க்க வரும் சரண்யா குடும்பத்தினர் மூத்த மகளை, தனது அண்ணனின் 2வது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

காதலிக்கு வேறு இடத்தில் திருமணம் என்பதை தாங்கிக் கொள்ளாமல், பிரபுவின் மூத்த மகன் கார்த்திக் மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயல்கிறார். அண்ணனுக்காக மணமகளை கடத்தி வந்து திருமணம் செய்து வைக்கிறார், விமல். இதனால், விமலின் காதலிக்கு அதே மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். விமல் என்ன செய்தார்? அவர் காதல் கைகூடியதா என்பதுதான் கதை.

அண்ணன் காதலை சேர்க்கும் இடத்திலும், இரண்டு குடும்பத்தை சேர்க்கும் இடத்திலும் விமல் மனதில் நிற்கிறார். ஆனால் சண்டை காட்சிகளின் இன்னும் அவர் மெனக்கட வேண்டும். நாயகி ஆனந்தியின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கிறது. அவரின் அழகு படத்துக்கு ப்ளஸ் பாயிண்ட். விமலின் போனை உடைத்துவிட்டு, அதை சமாளிக்க அவர் சொல்லும் பொய்கள் அழகு. சரண்யா, ஜே பி , நீலிமா ராணி, அப்புறம் மலையாள வாசனையோடு பேசும் அந்த பாட்டி ஆகியோர் , சீமந்தத்துக்கு போக முடியாமல் நாயகியின் அண்ணனுக்கு பயப்படும் காட்சி அருமை .. ரோபோ சங்கர், சிங்கம்புலி.இருவரும் தான் படத்தின் ஆறுதல். குறிப்பாக சிங்கம்புலி, தனக்கு கிடைத்திருக்கிற ஒவ்வொரு இடத்திலும் சரவெடி போடுகிறார். இவர்கள் இருவரைத் தவிர, இரண்டு காட்சிகளில் வந்தாலும் தன்னை நிரூபிக்கிறார் யோகி பாபு மொத்தத்தில் காமெடி என்ற ஒரு விசயத்தினால் “மன்னர் வகையறா” ரசிகர்களை குஷிப்படுத்தும்.

– Jackie Cinemas Team