நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடி தமிழ் படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

ஹிட் பாடலிலிருந்து பிரபல வரியை படத்திற்கு தலைப்பாக வைப்பது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால் எந்த ஹிட் பாடலிலிருந்து எந்த வரியை தலைப்பாக தேர்வு செய்து வைப்பது பொருத்தமாக இருக்கும் என்பது பல இயக்குனர்களுக்கு இன்றுவரை சவாலாகவே உள்ளது. நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த நேரடி தமிழ் படத்திற்கு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தை திரு. பிரான்சிஸ் அவர்கள் தயாரிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி பேசுகையில் , ” இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாடல் மனதிற்கு வந்தது. காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை. மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான் . இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும் , வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என உறுதியாக நம்புகிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க ரீத்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளோம். இப்படத்திற்கு K M பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.கலை இயக்குனர் டி. சந்தானம். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது ” என்றார்.