‘களவாணி-2’வுக்காக ஒன்றுகூடும் சற்குணம் – விமல் கூட்டணி..!

வெள்ளந்தியான வேடங்களில் யதார்த்தமாக நடிப்பவர் யாரென்று கேட்டால் சட்டென நினைவுக்கு வருவது நடிகர் விமலின் முகம் தான். சமீபகாலமாக விமல் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் ‘புலி பதுங்குவது பாய்வதற்குத்தான்’ என்கிற விதமாக உற்சாகமாகவே இருக்கிறார் விமல்.. இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்துள்ள ‘மன்னர் வகையறா’ படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளதே அதற்கு காரணம். இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது என்பது இன்னொரு ஸ்பெஷல்..

இந்தநிலையில் விமல் நேற்று விமரிசையாக தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் பலர் கலந்துகொண்டனர் அத்துடன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தற்போது தான் தயாரித்து நடித்துவரும் ‘மன்னர் வகையறா’ படத்தை தொடர்ந்து தான் தயாரித்து நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டார்.

தற்போது மன்னர் வகையறாவை முடித்த கையுடன் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் விமல். அதனை தொடர்ந்து ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி இயக்கதில் நடிக்கயுள்ளார். இந்த படத்தில் நடிகர் சமுத்திரக்கனி அவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

நடிகர் விமலின் திரையுல வாழ்க்கையை ‘களவாணி’ மூலம் ‘புதிய பாதைக்கு’ திருப்பிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் களவாணி-2’ படத்தில் மீண்டும் விமல் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல சூரி, கஞ்சா கருப்பு கூட்டணியும் இதில் தொடர்கிறது. நடிகர் மாதவன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தை சற்குணம் இயக்குகிறார். அதனை தொடர்ந்து ‘களவாணி-2’ தொடங்கும்.

ஆக 2017 விமலுக்கு சுபிட்சமான ஆண்டாக இருக்கும் என்றே சொல்லலாம்.