மரகத நாணயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது – நிக்கி கல்ராணி

மரகத நாணயம் என்பதை விட ஆர்வத்தை தூண்டும் ஒரு தமிழ் படத்தலைப்பு இருக்க முடியாது. இந்த சாகசம் மற்றும் காமெடி கலந்த கற்பனைத் திரைப்படம் நல்ல பல திறமையான நடிகர்களையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆதி, நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க அவர்களுடன் ஆனந்த் ராஜ், டேனியல், ராம்தாஸ், அருண்ராஜா காமராஜ் என திறமையான நடிகர்ளும் நடிக்கிறார்கள். நல்ல கதை, திரைக்கதை என உள்ளடக்கம் தான் ஹீரோ என்பதை நம்பும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஏஆர்கே சரவணன் இயக்கியிருக்கிறார்.

படத்தின் நாயகியும், முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் இளம் நாயகியுமான நிக்கி கல்ராணி கூறும்போது, “மரகத நாணயம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். சிறு வயதிலிருந்தே நான் விரும்பி, ரசித்து பார்க்கும் ஃபேண்டஸி வகைப் படங்களில் நானும் நடித்திருக்கிறேன் என நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், வானத்தில் பறப்பது போலவும் உணர்கிறேன். என் கதாப்பாத்திரம் மிகவும் புதுமையாக இருக்கும். நல்ல திரைக்கதை மற்றும் கதை சொல்லலுடன் சிறப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் ரசிப்பதோடு, அவர்களின் பாராட்டு மற்றும் ஆதரவையும் மரகத நாணயம் படக்குழுவுக்கு வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.