பணம் வந்தால்.. ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ வரும் – போத்ரா!

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தடையா? தடையில்லையா? எனப் புரியாத குழப்பமான இன்றைய சூழ்நிலையில் தடை கோரி பைனான்சியர் போத்ரா தொடங்கிய வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று திடீரென செய்தி வந்துள்ளது. இந்நிலையில் உண்மை நிலை பற்றியும் தனது நிலை என்ன என்பது பற்றியும் தெரிவிக்க பைனான்சியர் போத்ரா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

”மொட்ட சிவா கெட்ட சிவா ‘ படத்தின் தயாரிப்பாளர் வேந்தர் மூவீஸ் மதன் தான் . அவர் எவ்வளவு பெரிய குற்றவாளி என்பது அனைவருக்கும் தெரியும். 105 மாணவர்களின் பணத்தை மோசடி செய்தவர். அந்தப் பணத்தை இன்னமும் யாருக்கும் கொடுக்கவில்லை.

தலைமறைவாக இருந்து கொண்டு தமிழ்நாட்டு போலீசையே அலையவிட்டவர். அப்படிப்பட்ட மதன் தயாரித்துள்ள படம் தான் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ .

அந்தப் படத்துக்குத்தான் நான் ஏழரை கோடி ரூபாய் பணம் கொடுத்தேன். அது தரப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். பைனான்சியரின் பாக்கி தீர்க்கப்படாமல் படத்தை வெளியிட முடியாது .எனவே தான் படத்துக்கு நீதிமன்றம் தடை ஆணை வழங்கியது. அந்தத் தடையை இந்த நேரம் வரை விலக்கப்படவோ ரத்து செய்யப்பட வோ இல்லை. ஆனால் படத்துக்கு தடை நீக்கப்பட்டு விட்டது என்று ஊடகங்களில் செய்திகள் பரப்பப் படுகின்றன.

மார்ச் 10- ல் படம் வெளியாகும் என்று விளம்பரங்களும் வருகின்றன. இது எவ்வளவு மோசடியானது.?

இந்தப் படத்துக்கான இரண்டு வழக்கு கள் நீதிமன்றத்தில் உள்ளன. மாண்புமிகு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், விமலா ஆகியோர் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதி ஒருவரின் மகன் சினிமாவில் பாடல் எழுதுகிறார். அவரை வைத்து தாங்கள் தடையை ரத்து செய்து விட்டோம் என்று தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். இது எவ்வளவு பெரிய பொய்?

நீதிபதி என்பவர் யார் சொல்வதையும் கேட்பவரல்ல. கடவுளே வந்தாலும் அவரை மாற்ற முடியாது. நான் நீதிபதியையும் நீதிமன்றத்தையும் முழுதாக நம்புகிறேன்.

மீண்டும் சொல்கிறேன் ‘மொட்ட சிவா கெட்ட சிவா ‘படத்துக்கு தடை நீக்கப்படவில்லை.

விநியோகஸ்தர்கள் , திரையரங்கு உரிமையாளர்கள் யாரும் இதை எல்லாம் நம்ப வேண்டாம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது படம் வெளியாகிறது என்று விளம்பரம் செய்வது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். அப்படி விளம்பரம் செய்யும் ஆர்.பி.செளத்ரி , டாக்டர் செல்வம் மீது இது பற்றி புகார் கொடுக்கப் போகிறேன்.” இவ்வாறு போத்ரா கூறினார்.