விஜய் ஆண்டனியும், ஜீவா ஷங்கரும் இரண்டு எமதர்ம ராஜாக்கள்” என்று ‘எமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார் விஜய் சேதுபதி

வர்த்தக உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து இருக்கும் விஜய் ஆண்டனியின் அடுத்த திரைப்படம் ‘எமன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள ‘சத்யம்’ திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில், விஜய் சேதுபதி, எஸ் எ சந்திரசேகர், ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன், ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ்’ மதன், ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா, ‘ஐங்கரன்’ கருணாஸ், காட்ராகட பிரசாத், ‘கே ஆர் பிலிம்ஸ்’ சரவணன், தயாரிப்பாளர் நந்தகோபால், கிருத்திகா உதயநிதி, இயக்குநர் சசி, இயக்குநர் அறிவழகன், இயக்குநர் என் ஆனந்த் (இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் மகிழ்திருமேனி, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, தனன்ஜயன் கோவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம், நடிகர் கலையரசன், நடிகை ரூபா மஞ்சரி மற்றும் ‘எமன்’ படத்தின் படக்குழுவினராகிய தயாரிப்பாளர் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம், விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், இயக்குநர் ஜீவா ஷங்கர், நடிகர் தியாகராஜன், படத்தொகுப்பாளர் வீர செந்தில்ராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன், நடன இயக்குநர் ஷெரிப், பாடலாசிரியர் முத்தமிழன், நடிகர் சார்லி மற்றும் நடிகர் சுவாமிநாதன் (லொல்லு சபா) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. எஸ் எ சந்திரசேகர் மற்றும் ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன் ‘எமன்’ படத்தின் இசை குறுந்தட்டை வெளியிட, அதை உற்சாகமாக பெற்று கொண்டார் விஜய் சேதுபதி.

“அற்புதமான காட்சிகளும், நெஞ்சை வருடிச் செல்லும் இசையும், ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கியம். அந்த வகையில், ஒரு தயாரிப்பாளராக எனக்கு கதாநாயகனே இசையமைப்பாளராகவும், இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் கிடைத்திருப்பதை எண்ணி, பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன். ‘எமன்’ படத்தின் கதை முற்றிலும் விஜய் ஆட்டணிக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். அவரோடு எங்களின் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் கைக்கோர்த்து இருப்பது பெருமையாக இருக்கின்றது” என்று உற்சாகமாக கூறினார் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ ராஜு மகாலிங்கம்.

“எமன்’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த தியாகராஜன் சார் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நிச்சயமாக எங்களின் ‘எமன்’ திரைப்படம் ஒவ்வொரு ரசிகரின் எதிர்பார்ப்பையும் முழுவதுமாக பூர்த்தி செய்யும்” என்று நம்பிக்கையுடன் கூறினார் விஜய் ஆண்டனி.

“முதலில் ‘எமன்’ படத்தின் கதையை ஜீவா ஷங்கர் என்னிடம் தான் கூறினார், ஆனால் தற்போது அந்த கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருப்பது விஜய் ஆண்டனி தான் என்பதை நினைக்கும் பொழுது அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. முதல் முறையாக இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடனம் ஆடி இருக்கிறார். அதை பார்ப்பதற்காக நான் ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன்” என்று உற்சாகமாக கூறினார் விஜய் சேதுபதி.