ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தை துவக்கி வைக்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான்

கனடாவில் உள்ள ரோரண்டோவில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான ஐடியல் குழுமம், “ஐடியல் எண்டர்டெயின்மெண்ட்” எனும் புதிய நிறுவனத்தை துவங்கவுள்ளது. படம் மற்றும் இசை விநியோகமும், படத்தயாரிப்பும் மேற்கொள்ளவுள்ள இந்நிறுவனத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி கனடாவில் உள்ள ரோரண்டோவில் துவக்கி வைக்கிறார்.
ஏ.ஆர்.ரஹமான் இயக்குனராக அறிமுகமாகும் “Le musk” திரைப்படத்தையும், ஏ.ஆர்.ரஹமான் கதை எழுதி தற்போது விரைவில் திரைக்கு வரவிருக்கும் “99 Songs” திரைப்படத்தையும் ஐடியல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனத்தை பற்றி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் கூறுகையில், “நான் என்னுடைய திட்டங்கள் மூலம் எந்த விதமான நேயர்களை சென்றடைய விரும்புகிறேனோ அவர்கள் உணர்வுகளை உண்மையாக புரிந்து கொள்ளும் ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட எதிர்நோக்குகிறேன். ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட்டில் உள்ளவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு அர எவ்வாறு கடினமாக உழைத்தார்கள் என்பதை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் நான். எனவே நான் இடும் கடின உழைப்பின் மதிப்பை அவர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள்.” என்றார்.
ஐடியல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஜி நாடா கூறுகையில், “ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ள, நாம் வாழும் இன்றைய உலகில் நேயர்கள் புதிய படைப்புகளுக்கான வேட்கை மிக்கவர்கள். ஐடியல் எண்டெர்டெய்ன்மெண்ட் இத்தகைய படைப்பில் முன்னிலை வகிக்க விரும்புகிறது, இதற்காக, எல்லைகளை விஸ்தரிக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என்றார்.