‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டார் ‘தோனி’ படத்தின் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட்

1937 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை குழந்தைகளின் கனவு உலகமாக திகழ்வது கார்ட்டூன் மற்றும் அனிமேஷன் படங்களும், தொடர்களும்  தான்….’ஸ்கூபி டூ – ஷாகி’ என்னும் கார்ட்டூன் தொடர் 90 களில் பிறந்த குழந்தைகளுக்கு கிடைத்த ஒரு சிறந்த பொக்கிஷம் என்றால், தற்போதைய காலத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு  ‘மோட்டு பட்லு’ என்னும் அனிமேஷன் தொடர் சிறந்த பொக்கிஷமாக கருதப்படுகிறது. குழந்தைகள் மட்டுமின்றி, பல தரப்பு இளைஞர்களையும் அதிகளவில் கவர்ந்த ஒரு சிறந்த  அனிமேஷன் தொடர்  ‘மோட்டு பட்லு’. ஃபுர்புரி நகரத்தில் வாழும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர்,  தற்போது ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ என்னும்  முழு நீல 3 – டி  அனிமேஷன் படமாக உருவாகி இருப்பது, குழந்தைகள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் அதிகரித்துள்ளது. ‘வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட்’, ‘காஸ்மோஸ் என்டர்டைன்மெண்ட்’ மற்றும் ‘மாயா டிஜிட்டல் ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்து இருக்கும் ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ 3 – டி அனிமேஷன் திரைப்படம், வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி தமிழ் மட்டும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிட்டார் ‘எம் எஸ் தோனி’ படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட்.
இந்திய திரையுலகின் முன்னணி கலைஞர்கள் சிலர் பணியாற்றி இருக்கும்  இந்த ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’  படத்தில், தேசிய விருது பெற்ற விஷால் பரத்வாஜ் – குல்சார் ஆகியோரின் கூட்டணியில் உருவாகி இருக்கும் பின்னணி இசை, நிச்சயமாக ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுக்கும் என்பதை எந்த வித சந்தேகமும் இன்றி சொல்லலாம். அது மட்டுமின்றி, ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ படத்திற்காக  தலைச்சிறந்த பாடகரான  சுக்விந்தர் சிங்  குரல் கொடுத்திருப்பது, மேலும் சிறப்பு.
இந்தியாவின் எழில்மிகு நகரமான ஃபுர்புரி நகரத்தில் வாழும் இரண்டு நண்பர்கள் மோட்டு மற்றும் பட்லு…. ஃபுர்புரி நகரத்தின் காட்டை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் ஒரு தீய மனிதனை பாதுகாத்து கொண்டு வருகிறது, சர்க்கஸில் இருந்து தப்பித்த  ஒரு சிங்கம்… எதிர்பாராத விதமாக மோட்டுவும், பட்லுவும், அந்த சிங்கத்தின் பிடியில் மாட்டிக் கொள்கின்றனர்…. அவர்களிடம் இருந்து எப்படி இந்த நண்பர்கள்   ஃபுர்புரி நகரத்தின் காட்டை பாதுகாக்கிறார்கள் என்பது தான் ‘மோட்டு பட்லு – கிங் ஆப் கிங்ஸ்’ திரைப்படத்தின் கதை.
“எப்படி தோனிக்கு நாடெங்கும் எண்ணற்ற இளம்  ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போல் இந்த ‘மோட்டு  பட்லுவிற்கும்’ நாடு முழுவதும் ஏகப்பட்ட குழந்தை ரசிகர்கள் இருக்கிறார்கள்….குழந்தைகளின் உள்ளத்தில் ஆழமாக பதிந்த  ‘மோட்டு  பட்லுவின்’ முதல் 3 டி அனிமேஷன் படத்தின் டிரைலரை வெளியிடுவதில் நான் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘எம் எஸ் தோனி’ படத்தின் கதாநாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புட்.