நான் எப்போது கதை எழுதினாலும் என் எண்ணத்தில் தனுஷ் சார் தான் வருவார் – கொடி இயக்குநர் துரை செந்தில் குமார்

கொடி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நாயகன் தனுஷ் , இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் , மதன் , கோபால் ஜேம்ஸ் , நாயகி அனுபமா பரமேஸ்வரன் , படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமார் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் , ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் , படத்தொகுப்பாளர் பிரகாஷ் மப்பு , நடன இயக்குநர் பாபா பாஸ்கர் , நடிகர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் பேசியது , இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் முதன் முதலில் கதை சொல்லும் போது அவரை தனுஷ் சாரிடம் கதை சொல்லுமாறு கூறினேன். அவர் தனுஷ் சார் தயாரிப்பில் இரண்டு வெற்றி படங்களை உருவாக்கினார். இப்போது நான் தனுஷ் சார் நடிப்பில் – துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும்  இப்படத்தை தயாரித்துள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த படத்தில் பெயருக்கு தான் தயாரிப்பாளர் என்று கூறுவேன். நான் தனுஷ் சாரிடம் உங்களை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டவுடன். தனுஷ் சார் உடனே துரை செந்தில் குமார் என்னிடம் கூறியுள்ள கதையை நீங்கள் தயாரியுங்கள் என்று கூறினார். இப்படி என்னுடைய வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் நடக்க காரணமாக இருந்த தனுஷ் சாருக்கு இந்த தருணத்தில் நான் நன்றி கூற வேண்டும் என்று கூறினார் இயக்குநர் வெற்றிமாறன்.

 

விழாவில் நாயகன் தனுஷ் அவர்கள் பேசியது , இதுவரை நான் நடித்த திரைப்படங்களான “ புதுப்பேட்டை “ போன்ற திரைப்படங்களில் சிறிய அளவில் அரசியல் இருக்கும். ஆனால் இப்படம் முழுக்க முழுக்க அரசியலை பற்றி பேசும் ஒரு படமாக இருக்கும். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு மிக சிறந்த இசையை கொடுத்துள்ளார் அவருக்கு நன்றி. நான் குக்கூ திரைப்படத்தில் இருந்து அவருடைய இசையை உற்று நோக்கி வருகிறேன். இப்படத்தில் அவரோடு பணியாற்றுவது மகிழ்ச்சி. இப்படத்திற்கு நான் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். இப்படம் நான் முதன் முதலில் நடிக்கும் ரெட்டை வேட திரைப்படம் இப்படத்தின் கதை இயக்குநர் துரை செந்தில் குமார் என்னிடம் கூறும் போது அக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நாம் ரெட்டை வேடத்தில் நடிக்க இதுவே சரியான படமாக இருக்கும் என முடிவு செய்து இப்படத்தில் நடித்தேன். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இப்படம் அரசியல் பற்றி பேசும் படமா அல்லது அரசியல் பற்றி இளைஞர்களுக்கு கருத்து கூறும் திரைப்படமா என்பதை நீங்கள் திரையில் வந்து பார்க்கும் போது உங்களுக்கு புரியும் , பிடிக்கும். இப்படத்தில் 8 வருடமாக ஒன்றாக பணியாற்றிய நண்பர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றியுள்ளோம். எங்கள் அனைவருக்கும் இது முக்கியாமான திரைப்படமாக இருக்கும் என்று கூறினார்.

 

இயக்குநர் துரை செந்தில் குமார் பேசியது  , இப்படத்தில் பல அரசியல் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரன் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவரிடம் நான் முதலில் கதை சொல்ல செல்லும்போது கதையை கேட்டவர் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து எனக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு நான் இப்படத்தில் நடிக்கிறேன் என்று கூறினார். முதலில் என்னுடைய இயக்கத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியவர். வீட்டிற்கு சென்று இப்படத்தை பற்றி கூறியதும் ஷோபா மேடம் அவரிடம் தனுஷ் படத்தில் நடிப்பது மிகப்பெரிய வாய்ப்பு அதில் நீங்கள் எப்படி நடிக்க மறுக்கலாம் நாங்கள் அனைவரும் தனுஷின் ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பாக கொடி திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியதாக கூறினார். நான் எப்போது கதை எழுதினாலும் என்னுடைய மனதில் தனுஷ் சார் தான் வருவார். அவர் தயாரித்த இரண்டு திரைப்படங்களை நான் இயக்கிவிட்டேன். இப்படத்தை அவரை வைத்து இயக்கியுள்ளேன். எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் படத்திற்கு சிறந்த இசையை கொடுத்துள்ளார் , அவருடைய வீட்டிற்கு சென்றாலே ஓர் நல்ல மனநிலை வரும். இந்த இடத்தில் நமக்கு நல்ல இசை கிடைக்கும் என்று தோன்றும் அதே போல் தான் அவருடைய ஸ்டுடியோவும் , எனக்கு நல்ல சூழலையும் நல்ல இசையும் தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு நன்றி.