” உடை அலங்காரம் பற்றிய தன்னுடைய யோசனைகளை கௌதமிக்கு வழங்கி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்…” என்கிறார் ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர்

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் “சபாஷ் நாயுடு”. இந்த படத்தில் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், கௌதமி தடிமல்லா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களாக “சபாஷ் நாயுடு” படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது சுருதி ஹாசனுக்கு பிடிக்கவில்லை…என்ற ஆதாரமற்ற செய்திகளும், வதந்திகளும் பரவி வருகிறது. ஆனால் இவை அனைத்தும் வெறும் கட்டுக்கதைகள் தான் என்று சொல்லி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

இந்த வதந்திகளை பற்றி ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தனெக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம். தன்னுடைய தந்தையின் ‘சபாஷ் நாயுடு” படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான்.அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும்  ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று  கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல் பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு  மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதே போல் ஸ்ருதி ஹாசனும் இந்த படத்தில் இருப்பார்’.

சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது என்கிறார் அவர்கள் இருவரையும் நன்கு அறிந்த ஒருவர். “ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது…”