19வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குனரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2015 ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குனராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் இந்த விருது விழாவில் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இவ்விருதினை பெறவிருக்கிறார்.

இயக்குனர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான பிரேம புஸ்தகம் படத்தினை இயக்கி கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்தார். இப்படத்தில் தான் அஜீத் அறிமுக நாயகனாக நடித்து கொண்டிருந்தார். இவரின் மறைவையடுத்து ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குனர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக “The Making of an Actor” எனும் தலைப்பில் ஸ்ரீ போமன் இரானி பேசுகிறார். கவுரவ விருந்தினர்களாக இயக்குனர் ப்ரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியை மெருகேற்றும் விதமாக நடிகர்/ இயக்குனர் என பல்முகம் கொண்ட சுகாசினி மணிரத்னம், தனது தந்தையான சாருஹாசன் எழுதிய சுயசரிதை “Thinking on my feet” புத்தகத்தை அடிப்படையாக கொண்டு மேடை நாடகத்தினை இயக்குகிறார். இதில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் அவரது மகளான மதுவந்தி அருண் இணைந்து நடிக்கின்றனர். இது வரை பல தமிழ் மேடை நாடகங்களில் நடித்துள்ள ஒய்.ஜி.மகேந்திரன் முதன்முறையாக ஆங்கில மேடை நாடகத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் நடிகர்கள் பிரசன்னா மற்றும் சுப்பாராவ் நடிக்கின்றனர்.