இலக்கை நோக்கி பாய தயாராகி வருகிறது ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம்

தற்காப்பு ஆயுதங்களின் பெயர்களை தலைப்பாக கொண்டு தமிழ் சினிமாவில் மாபெரும் வெறி பெற்ற ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய படங்களின் வரிசையில் இணைய தற்போது தயாராகி வருகிறது ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம். ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளப்பாண்டியன் தயாரிக்கும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்தை இணை தயாரிப்பு செய்கிறது ‘பிக்பிரிண்ட் பிச்சர்ஸ்’.  இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர். முற்றிலும் திறமை படைத்த  புதிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி வரும் இந்த ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார் கே எஸ் சுந்தரமூர்த்தி (அவம், கிரகணம்).
‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘நாளைய இயக்குனர் – பகுதி மூன்றின் இறுதிச்சுற்று  போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. “பொதுவாகவே ஒரு பொருளை துளைத்து கொண்டு போவது தான் தோட்டாவின் குணாதியசம். ஆனால் அது எதனை துளைக்கிறது என்பதில் தான் விஷயமே இருக்கிறது . ஒரு துப்பாக்கியில் எட்டு தோட்டாக்கள் இருந்தாலும் அந்த எட்டும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பதில்லை, மாறாக அந்த எட்டு தோட்டாக்களும் வெவ்வேறு இலக்குகளை நோக்கி தான் பாயும். இது தான் எங்களின் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்தின் ஒரு வரி கதை. பரபரப்பான கிரைம் – திரில்லர் படமாக உருவாகும் எங்கள் ‘8 தோட்டாக்கள்’ திரைப்படமானது ஒரு போலீஸ் அதிகாரியையும், அவரை சுற்றியுள்ள ஏனைய கதாப்பாத்திரங்களையும் கொண்டு நகரும். விறுவிறுப்பான திரைக்கதையும், சுவாரசியமான திருப்பங்களையும் உள்ளடக்கி இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படம் விரைவில்  ரசிகர்களின் கவனத்தை  ஈர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது…”என்று கூறுகிறார் ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ்.