பிரபல இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து கலக்கும் ‘கடுகு’ படத்தின் டீசர்

“இந்த உலகத்துல கெட்டவங்கள விட மோசமானவங்க யாருன்னா… என்ற கம்பீர குரலில் ஆரம்பிக்கும்  ‘கடுகு’ படத்தின் டீசர் தான் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் மக்கள் இடத்தில் தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்த இயக்குனர் விஜய் மில்டன் இந்த கடுகு படத்தை இயக்க, ‘ரஃப் நோட்’ நிறுவனத்தின் சார்பில் பாரத் சீனி கடுகு படத்தை தயாரித்து இருக்கிறார். நடிகர் பரத், இயக்குனர் ராஜகுமாரன் மற்றும் விஜய் மில்டனின் சகோதரரும், தயாரிப்பாளருமான  பாரத் சீனி  ஆகியோர் கடுகு படத்தின்  முக்கியகதாப்பாத்திரங்களில் கூட்டணி அமைத்து   நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டரை நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவில், முதல் ஒன்றரை நிமிடம் பிரபல இயக்குனர்கள் சுசீந்திரன், லிங்குசாமி, பாண்டிராஜ், வெங்கட் பிரபு மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நையாண்டியான யோசனைகளை கூற, அதன் பிறகு ஆரம்பமாகிறது கடுகு படத்தின் டீசர். கோலி சோடா படத்திற்கு பின் என்ன  பண்ணலாம் என்று கடுகு படத்தின்விஜய் மில்டன் கேட்க, அதற்கு  சுசீந்திரன் “இறுதிச்சுற்று மாரி ஒரு கதை இருக்குன்னு சொன்னீங்களே…” என்றும், இயக்குனர் பாண்டிராஜ் “பேசமா கோலி சோடா பார்ட் 2 வே பண்ணிடுங்க” என்றும் சொல்கின்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் விஜய் மில்டன் கடுகு படத்தின் கதையை நடிகர் பாரத்திடமும், நடிகை சுபிக்ஷாவிடமும் பின்வருமாறு கூறுகிறார் “ஒரு பத்து பேர் உள்ள பஸ் ஸ்டாண்ட்ல, உன்ன மாரி ஒரு பையனையும்,அவங்கள மாரி உள்ள ஒரு பெண்ணையும் தான் நோட் பண்ணுவாங்க. ஆனா மூணாவதா மக்கள் நோட் பண்ண கூடிய ஆள் யாரு?” என்று கேட்கிறார் இயக்குனர் விஜய் மில்டன். யார் அந்த மூன்றாவது நபர் என்ற ஆர்வம் பார்வையாளர்களின் மனதில் அலைந்து ஓட,அந்த இடத்தில் என்ட்ரி கொடுக்கிறார் நடிகரும், இயக்குனராமான ராஜ குமாரன்.

“இயக்குனர் ராஜகுமாரனையா நடிக்க வைக்க போறீங்க?” என்று இயக்குனர் லிங்குசாமி ஆச்சரியத்துடன் கேட்க, இயக்குனர் வெங்கட் பிரபுவோ “அப்படி என்றால் கடுகு படம் அதிரடியா? இல்ல திகில் படமா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார். அதனை தொடர்ந்து ராஜகுமாரனை விஜய் மில்டனும் அவரது கடுகு படக்குழுவினரும் கதை சொல்ல அணுகுகின்றனர். ஆனால் ராஜகுமாரனோ “நல்ல யோசிச்சீங்களா? நான் தான் நடிக்கனுமா” என்று நையாண்டியாக கேட்கும் விதம் பார்வையாளர்களை கலகலவென சிரிக்க செய்கிறது.”அவர் நடிப்பதில் அவருக்கே சந்தேகமா???” என்று இயக்குனர் பாண்டிராஜ் விஜய் மில்டனிடம் கேட்ட,  “அவரை வச்சி முதலில் ஒரு டீசர் எடுப்போம். அது நல்ல ஹிட் ஆச்சுன்னா அப்படியே தொடர்ந்து போவோம்” என்று இயக்குனர் பாலாஜி சக்திவேலும்,இயக்குனர் லிங்குசாமியும் கூறுகின்றனர். அப்போது ஆரம்பமாகும் கடுகு படத்தின் டீசரானது “இந்த உலகத்துல கெட்டவங்கள விட மோசமானவங்க யாருன்னா….” என்ற வார்த்தைகளோடு துவங்கி, “தப்பு நடக்கும் போது ஏன்னு தட்டி கேக்காத நல்லவங்க தான்….” என்ற வார்த்தைகளோடு முடிவடைகிறது. புலி வேஷம் போட்டிருக்கும் ராஜ குமாரனின் கெட்டப் கடுகு டீசரின் ஆரம்பத்தில் கம்பீரகமாகவும், இறுதியில் அவர் பார்க்கும் பார்வை அனைவரையும் சிரிக்க வைக்கும் விதத்திலும் அமைந்திருப்பது கடுகு டீசரின் சிறப்பம்சம்.

கடுகு டீசரை யூடூப்பில் கண்ட இயக்குனர் வெங்கட் பிரபு  “விஜய் மில்டனின் கதை களம்எப்போதுமே சற்று வித்தியாசமானது தான். அதை நிரூபிக்கும் வண்ணமாகஅமைந்திருக்கிறது இந்த கடுகு படத்தின் டீசர்” என்றார். மேலும் இயக்குனர் லிங்குசாமிகடுகு டீசரை பார்த்த பிறகு, ” இந்த அளவிற்கு கடுகு டீசர் என்னை சிரிக்க வைத்து விடும் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கண்டிப்பாக விஜய் மில்டனுக்கு இந்த கடுகு திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும். கடுகு படக்குழுவினருக்கும், விஜய் மில்டனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறினார். இப்படி பெரும்பாலான திரையுலக நட்சத்திரங்கள் விஜய் மில்டனின் கடுகு டீசருக்கு சமூக வலைத் தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் “மிகவும் இயல்பாகவும், எதார்த்தமாகவும்  உருவாக்கப்பட்டிருக்கிறது. கடுகு – விஜய் மில்டனின் ஒரு தைரியமான முயற்சி” என்று எழுதி இருக்கிறார். இப்படி பல சுவாரசியங்களை உள்ளடக்கி உள்ள கடுகு திரைப்படம் விரைவில் மக்கள் மனதிற்கு பிடித்த திரைப்படமாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.