ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டியின் மேற்பார்வையில் இன்று ஆரம்பமானது ‘ரெமோ’ படத்தின் டப்பிங்!

‘நம் வீட்டு பிள்ளை’ என்ற பெயரை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் சம்பாதித்து இருக்கும் நடிகர், சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் ‘ரெமோ’ திரைப்படமானது, அதன் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ஏகப்பட்ட வரேவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது மேலும் சுவாரசியம் ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது, ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டியின் என்ட்ரி. சமீபகாலமாகவே சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் வெற்றி கூட்டணிதான் மக்களின் மனம் கவர்ந்த கூட்டணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது . புதுமுக இயக்குனர் பாக்யராஜின் அளவுகடந்த சிந்தனையும், சிவகார்த்திகேயனின் புதுமையான முயற்சியும், ரெமோ படத்தை வெற்றியின் சிகரத்திற்கு தூக்கி செல்லும் என்பதை உறுதியாக சொல்லலாம்.
இப்படி சுவாரசியங்களையும், புதுமைகளையும் ஒன்றின் மேல் ஒன்று என அடுக்கி கொண்டே போகும் ரெமோ திரைப்படத்தின்  டப்பிங்கானது இன்று முழு வீச்சில் துவங்கப்பட்டது. ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டியின் மேற்பார்வையில் இந்த டப்பிங் நடைபெற்று கொண்டிருப்பது அனைத்து ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமின்றி ‘இந்தியா’ஸ் டாட்டர்’ என்ற ஆவண படத்திற்கு கோல்டன் ரீல் விருதை தட்டிச்சென்ற முதல் ஆசிய குடியமகன் ரசூல் பூக்குட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஜுன் 23 ஆம் தேதி வெளியாகும்  ‘ரெமோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரையும், ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரில் வெளியாகும்  ‘செஞ்சிட்டாளே’ பாடலையும் அமோகமாக வரவேற்க காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஒரு மகிழ்ச்சி விருந்தாக அமைந்திருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
24 AM ஸ்டுடியோஸ் சார்பில் RD ராஜா மிக பிரம்மாண்டமாக  தயாரித்து வரும் இந்த ரெமோ படத்தில் PC ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, அனிரூத்தின் இசை, ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியின் சிறப்பு பங்களிப்பு மட்டுமின்றி ஹாலிவுட்டின் புகழ் பெற்ற ஒப்பனை கலைஞர் வீட்டா ஒர்க்ஷாப்பின் சீயன்  பூட் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.