அபிராமி மெகா மால் உன்னோடு கா

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் நடிப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இப்படத்திற்காக நான் இரண்டு வித கெட்டப்புகளில் நடித்து இருக்கிறேன். கிராமத்தில் கையில் அருவாளை தூக்கிக்கொண்டு வெட்ட துரத்தும் முரடனாகவும், சென்னையில் தன் மகனின் காதலை சேர்த்து வைக்க போராடும் பாசமுள்ள தந்தையாகவும் நடித்துள்ளேன். இப்படத்தில் ஊர்வசி அவர்கள் எனக்கு மனைவியாக நடித்துள்ளார். நாங்கள் ஜோடியாக இணைந்து நடித்தாலே படத்தில் கலாட்டாதான்.

இப்படத்தின் கதையை திரு. அபிராமி ராமநாதன் அவர்கள் எழுதி இருக்கிறார். கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிப்பது என முடிவு செய்துவிட்டேன். இது போன்ற நகைச்சுவை படம் அமைவது அரிதானது. இன்றைய காலகட்டத்தில், ஒரு படத்தை குடும்பத்தினருடன் வந்து பார்ப்பது மிக மிக அரிது. காரணம் பொழுது போக்கு அம்சம் நிறைந்த கதைகள் குறைந்தே வருகிறது. இக்குறையை அபிராமி ராமநாதன் அவர்கள் “உன்னோடு கா” படத்தின் மூலம் நிவர்த்தி செய்து விட்டார். அது மட்டுமின்றி நகைச்சுவையாக, நல்ல கருத்தையும் சொல்லியிருக்கிறார்.
படம் முழுக்க ஒவ்வொரு காட்சிகளிலும், ஊர்வசி அவர்களும் நானும் ரசித்து, சிரித்தபடியே நடித்து இருக்கிறோம். எங்களுடன் சேர்ந்து படப்பிடிப்பு குழுவினரும் ரசித்து, சிரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கதை நாயகனாக ஆரி, நாயகியாக மாயா, பாலசரவணன், மிஷா கோஷல், கை தென்னவன், ஸ்ரீரஞ்சனி, மனோபாலா, மன்சூரலிகான், M.S.பாஸ்கர், சுப்பு பஞ்சு, ராஜாசிங், வினோத்சாகர், தேனிமுருகன், சண்முகசுந்தரம், சாம்ஸ், நாராயண் என சிறந்த கலைஞர்களுடன் இணைந்து நடித்து இருப்பது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

கிராமம் மற்றும் நகரம் என இரு வேறுபட்ட கதைக்களத்துடன், குடும்பம், காதல், கல்யாணம், நட்பு, என பல அம்சங்களுடன் வரவிருக்கும் “உன்னோடு கா” படம் இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை படமாக கண்டிப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன். எங்களை வாழ வைக்கும் தமிழக திரை ரசிகர்களுக்கு, நாங்கள் ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறோம், என்பது பெருமகிழ்ச்சியாக உள்ளது.
ஒளிப்பதிவில் சக்திசரவணன், இசையில் C.சத்யா, நடனத்தில் கல்யாண், அதிரடி ஆக்சன் காட்சிகளில் விஜய்ஜாக்குவார் என சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னுடைய நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை 60-க்கும் மேற்ப்பட்ட புதிய இயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குனர் ஆர்.கேவும், அறிமுக இயக்குனரே. இளைய தலைமுறையான இவருடனும், இவருடைய டீமுடன் இணைந்து பணிபுரிந்தது என் இளமை கால நாட்களை நினைவுபடுத்துகிறது. என்று இளையதிலகம் பிரபு அவர்கள் மனம் திறந்து கூறினார்.