ஹீரோக்களுக்கு செலவு செய்வதற்கு பதில் கதைக்கு செலவு செய்யுங்கள் ” மெய்ப்பட செய் ” இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் K.ராஜன் பேச்சு

எஸ்.ஆர்.ஹர்ஷித்  பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பி.ஆர்.டி. என்று அழைக்கப்படும் பி.ஆர்.தமிழ் செல்வம் தயாரித்துள்ள புதிய படம், ‘மெய்ப்பட செய்’. ஆதவ் பாலாஜி கதாநாயகனாகவும், மதுநிக்கா கதாநாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் வேலன். சுயநலத்துக்காக பல பாவங்களைச் செய்து அதிகாரத்தையும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளையும் பயன்படுத்தி மக்களோடு மக்களாக கலந்திருக்கும் குற்றவாளிகளுக்கு ஒரு பாடமாகவும், பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து,  பட வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கை சந்திப்பு, பிரபலங்கள்,  படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
தமிழ் சினிமாவின் கண்டண்ட் திலகம் ராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், அவர் தான் சிறு படங்களை வாழவைத்துகொண்டுள்ளார். தமிழ் சினிமா எப்படி இருக்கிறது என்பது அவர் பேச்சில் தான் விவாதிக்கப்படுகிறது. இப்படத்தின் எஸ்.ஆர்.ஹர்ஷித் பிக்சர்ஸ்க்கு முதலில் வாழ்த்துக்கள். இயக்குநர் வேலன் படத்தை நன்றாக எடுத்துள்ளார் மிகவும் பணிவாக உள்ளார். எங்களிடம் இருந்த பணிவை அவரிடம் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது பணிவு தான் எங்களை இந்த இடத்தில் வைத்துள்ளது. இயக்குநர் படத்தை மிக தெளிவாக தரமாக எடுத்துள்ளார். பாடல் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. பாடலில் நாயகி தலையனையை பிய்த்து பறக்க விடுவதெல்லாம் நிஜ வாழ்வில் அனுபவத்துடன் செய்வது போல் செய்துள்ளார்கள். வாழ்த்துக்கள். நம்ம தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்கள் ஓடுகிறது என காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். தமிழை பார்த்து தான் பாலிவுட்டிலேயே படத்தை காப்பி அடித்து எடுத்தார்கள் தமிழ் சினிமா ஆண்ட மொழி ஆளும் மொழி. ரசிகர்கள் எல்லோரும் நல்லவர்கள், நம் படங்கள் அங்கு ஓடும் போது நாம் சந்தோசப்படுகிறோம் அல்லவா அது போல் இப்போதும் சந்தோசப்படுவோம். இப்போது கதைகளில் பஞ்சம் இருக்கிறது அதை சரி செய்ய வேண்டும். இப்போது இயக்குநர் சங்கத்தில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நல்ல கதைகள் வைத்துள்ள இயக்குநர்களை தேர்ந்தெடுத்து அக்கதைகளை தயாரிக்கவுள்ளோம்.எங்கள் சங்கத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தது ஆனால்  இந்த கோரோனா காலத்தில் பல உதவிகளை பெற்று தந்தது எங்கள் சங்கம் தான் என்று சொல்லிக்கொள்கிறேன். தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளை கேட்டு தயாரியுங்கள். இப்படத்தை மிக சிறப்பாக எடுத்துள்ளார்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர்  கே ராஜன் பேசியதாவது…
இயக்குனர் ராஜ்கபூர் தயாரிப்பாளர் நலனுக்காக படம் எடுத்தவர். ஆர் வி உதயகுமார் நல்ல படங்களாக எடுத்தவர்.  இப்படத்தில் இசை மற்றும் பாடல்வரிகள் அற்புதமாக இருந்தது. அதிக சம்பளம் வாங்கி கெடுப்பவர்கள், அதிகம் செலவு செய்பவர்கள் தான் கீழே போக வேண்டும். தயாரிப்பாளர்கள் வாழ வேண்டும், தமிழ் படங்கள் ஜெயிக்க வேண்டும். தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகையர்கள் ஜெயிக்க வேண்டும். இப்படத்தில் ஹீரோயின் அழகாக இருக்கிறார் இப்பொதெல்லாம் நாயகியகள் ஆடியோ விழாவிற்கு வருவதில்லை.   நயன்தாரா ஆடியோ லாஞ்ச் வருவதில்லை. அவர்கள் வந்து  படம் ஓடாவிட்டால் அவர்களுக்கு கெட்ட பெயராம்.. அதற்காகவா  ஆறு கோடி வாங்குகிறார்.  நடிகர், நடிகையர்களை தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவர்கள் தான் படத்தை ஓடவைக்க வேண்டும். கதாநாயகர்களுக்கு செலவு செய்வதற்கு பதில், கதைக்கு செலவழிக்க வேண்டும். தயாரிப்பாளருக்காக படம் பண்ண வேண்டும். பிரபாஸ், ராம்சரண். போயபட்டி ஶ்ரீனு பட போன்ற தெலுங்கு பிரபலங்கள் தோல்வியில் பங்குகொள்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி இல்லை. நடிகர்கள் 100 கோடி வாங்கினால், எப்படி படம் எடுப்பது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் குறைவான சம்பளத்திற்கு நடித்தனர். நடிகர்கள் போனிகபூருக்கும், தெலுங்கு தயாரிப்பாளருக்கும் படம் கொடுக்கின்றனர். கஷ்டப்படும் தமிழ் தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை. இந்த படத்தின் பாடல்கள் அருமையாக உள்ளது. இம்மாதிரி சின்ன படங்கள் ஜெயிக்க வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி
இப்படத்தில் பி.ஆர்.தமிழ்செல்வம், ஆடுகளம் ஜெயபாலன், ராஜ்கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், ஞானபிரகாசம், சிவா, அட்டு முத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ், பயில்வான் ரங்கநாதன், ராகுல் தாத்தா, பெஞ்சமின், அனீஸ், எமில் கணபதி, ராகவமூர்த்தி, திண்டுக்கல் தனம், காஞ்சனா, தீபா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.
‘பார்வை ஒன்றே போதும்’ புகழ் பரணி நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். அவரது அற்புத இசையில் உமாதேவி, பரணி, வேலன் ஆகியோரின் வரிகளில் 4 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. அனைவரையும் பிரமிக்க செய்யும் வகையில் மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார். ‘மிருதன்’ பட புகழ் கே.ஜே.வெங்கட்ரமணன் படத்தொகுப்பு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் ரசிக்கும் விதத்தில் நடனம் அமைத்துள்ளார் தீனா. படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.