பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரியோ ராஜ்-ரம்யா நம்பிசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டியோஸ் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இன்று சம்பிரதாயமான பூஜையுடன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.
“இது போன்ற மழை நாளில் படப்பிடிப்பு துவங்கியதை இயற்கையின் ஆசிர்வாதமாக நினைக்கிறேன். மேலும் பல முனைகளிலிருந்தும் வரும் நேர்மறையான ஆதரவு படத்தின் வெற்றிக்கு அடிகோலுமென நம்புகிறேன்” என்று கூறுகிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.
ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் முனீஷ்காந்த், ரோபோ சங்கர், பால சரவணன், விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், ரேகா, சந்தான பாரதி, லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பழைய ஜோக் தங்கதுரை ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மட்டுமின்றி கேரளா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கிளிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களைப் பிரதானப்படுத்தி உருவாகும் இப்படத்தை பாசிடிவ் பிரண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக அமைந்திருப்பது யுவன் சங்கர் ராஜாவின் இசை.
படத்தின் கதையை ஏ.சி.கருணாமூர்த்தி எழுத, வசனங்களை ஆர்.கே. எழுதுகிறார். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பை கவனிக்கிறார். ஸ்டண்னர் சாம் சண்டைக்காட்சிகளை அமைக்க, கலை இயக்குநரராகப் பணியாற்றுகிறார் சரவணன். மக்கள் தொடர்பு பணிகளை சுரேஷ் சந்திரா, ரேகா (டி.ஒன்) கவனிக்கின்றனர்.