நயன்தாராவை எதிர்த்து பேசினேன் ; பிரஜின் கொடுக்கும் ஷாக்

சின்னத்திரை வெள்ளித்திரை என்று இரண்டிலுமே சரிசமமாக கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள லவ் ஆக்ஷன் ட்ராமா என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.

 

நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் என்ன என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பிரஜின்.

 

மலையாளத்தில் ஏற்கனவே சமீபத்தில் வெளியான ‘த்ரில்லர்’ படம் உட்பட 4 படங்களில் நடித்துள்ளேன்,, சண்டக்கோழி வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் ‘டோர்னமெண்ட்’ என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது அந்த படத்தை பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்.. அப்போது தான் அவரும் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ் தான், இந்த லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.

 

இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச்சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

இந்தப்படத்தின் இயக்குநர் தயன் சீனிவாசன் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகன் அதுமட்டுமல்ல, இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியும் கூட.. இதுவரை ஹீரோவாக சில படங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் டைரக்ஷன் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.. அவரது தந்தை, அண்ணனை போலவே இவருக்கும் நடிப்பு டைரக்சன் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருந்ததால் அவர் தற்போது இயக்குநராக மாறியுள்ளார்.

முதல் படம் என்றாலும் நிவின்பாலி நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணி அமைத்து, கிடைத்த முதல் வாய்ப்பில் சிக்ஸர் அடித்துள்ளார்.  ஒரு சிலர் இப்படி பிரம்மாண்ட கூட்டணி அமையும்போது அந்த வாய்ப்பை கோட்டை விட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் தயன் சீனிவாசன் கதையையும் அதற்கேற்ற கதாபாத்திரங்களையும் கச்சிதமாக தேர்வு செய்து முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த படத்தின் ஹீரோவான நிவின்பாலி, ஒரு வடக்கன் செல்பி படத்திற்கு பிறகு நீண்ட நாள் கழித்து இப்படி ஒரு ஜாலியான படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில், தான் ஒரு முன்னணி ஹீரோ என்றாலும் அதற்கான எந்தவித ஒரு பந்தாவும் இல்லாமல் மிக இயல்பாக பழகினார். தமிழில் இருந்து வரும் நடிகர்களுக்கு நல்ல வாய்ப்பு தரவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதேபோல நயன்தாரா உடன் இந்தப்படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால் ஒரு சில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.

இந்த படத்தை  பார்த்தவர்கள்  மலையாளத்தில்  ஒரு முக்கியமான படத்தில்  வில்லனாக நடித்திருப்பது கண்டு ஆச்சரியப்பட்டு பாராட்டினார்கள். முக்கியமாக எனது நடிப்பைப் பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்தார். கேரளாவின் மிகப்பெரிய விருதைப் பெற்றதுபோல் உணர்ந்தேன். பொதுவாக ஒரு மிகப்பெரிய படத்தில் வில்லனாக நடிக்கும்போது அதில் மிகப்பெரிய ரீச் கிடைக்கும். அதுமட்டுமல்ல ஒரு நடிகருக்கு எல்லா மொழிகளிலும் நடிப்பது ரொம்பவே முக்கியம்.. அப்போது தான் மற்ற மொழிகளில் இருந்தும் நம்மை தேடி வாய்ப்புகள் வரும்..

 

தற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்கிற படத்தில் நடித்துள்ளேன். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர தற்போது மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லவ் ஆக்சன் ட்ராமாவை தொடர்ந்து, இனி மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கிறேன். இன்னொரு பக்கம் சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டுமொரு பிரமாண்டமாக தொடரில் என்னை எதிர்பார்க்கலாம்.. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன” என்று சந்தோசத்துடன் கூறினார் பிரஜின்.