ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபாஸ்!

லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகன் ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அந்த ரசிகர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்திருக்கிறார். ஆம், இந்திய துணை கண்டத்தின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான நடிகர்களில் ஒருவரான பிரபாஸின் ரசிகர்கள் அவரின் இன்ஸ்டாகிராம் வருகையை மிக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தனர். அத்தகைய நிபந்தனையற்ற அன்பு மற்றும் ரசிகர்களின் பாசம் காரணமாக, இன்ஸ்டாகிராம் என்ற இந்த சமூக ஊடகத்தில் இணைந்திருக்கிறார் பிரபாஸ்.

5 வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் ‘பாகுபலி’ என்ற ஒரு நம்பமுடியாத இமாலய வெற்றியை பெற்ற பிரபாஸ், அங்கேயே நின்று விடாமல், தொடர்ந்து ‘சாஹோ’ என்ற இன்னும் ஒரு மிக பிரமாண்ட படத்தை அறிவித்து அனைவரையும் வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்றார். சந்தேகமே இல்லாமல் சாஹோ படத்தின் ஒவ்வொரு தகவலும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது. ரசிகர்கள் பிரபாஸிடம் கேட்பது ஒன்றே ஒன்று மட்டும் தான். அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழிலை பற்றி தெரிந்து கொள்ள கொஞ்சம் நெருக்கமாக அவர்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்பது தான். நிச்சயமாக, இந்த செய்தி ஒவ்வொருவருக்கும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது உறுதி.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் உருவாகி வரும் சாஹோ படத்துக்காக மிகவும் கடுமையாக உழைத்யு வருகிறார் பிரபாஸ். இந்த படம் ஏற்கனவே அனைவரின் விருப்ப பட்டியலிலும் இடம் பிடித்து உள்ளது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகி ஷ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்க அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சங்கி பாண்டே, மகேஷ் மஞ்ச்ரேக்கர் மற்றும் முரளி ஷர்மா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் மற்றும் விக்ரம் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த படம் சர்வதேச திரைப்படங்களுக்கு சவால் விடும் வகையில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது.