ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட மீரா மிதுன்

சூர்யா விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார்.

சினிமாவிற்கு தான் இவர் புதிது.. ஆனால் மாடல் உலகில் கிட்டத்தட்ட இவர் ஒரு நயன்தாரா என்றே சொல்லலாம். ஆம்.. சர்வதேச அளவில் மோஸ்ட் வான்டட் தென்னிந்திய மாடல் முதல் சாய்ஸாக இருப்பது மீரா மிதுன் தான்.

மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு.. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் நிறமும் ஒரு மாடல் அழகியாகவே பலருக்கும் தோன்றச் செய்தது..

ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நீங்கள் மாடலா என பலரும் கேட்கவே, அவருக்குள் தன்னை அறியாமலேயே மாடலிங் மீதான ஆர்வம் தூண்டப்பட்டது தவிர அவருடைய தந்தையும் மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் தமிழ்நாடு ஆகிய பட்டங்களை வென்றவர். ஆகவே மாடலிங்கில் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதிலும் அதில் நுழைந்து சாதித்ததிலும் பெரிய ஆச்சரியம் ஏதுமில்லை

கோ-ஆப் டெக்ஸ் விளம்பரத்தில் ஆரம்பித்து படிப்படியாக பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் மாடலாக புகழ்பெற்ற மீரா மிதுன், குறுகிய காலத்திலேயே மாடலிங் துறையில் புகழின் உச்சியை எளிதாக தொட்டுவிட்டார்.

பலரும் இவரை சினிமாவில் நடிக்கச் சொல்லி வற்புறுத்தி வந்த நிலையில், அதில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத இவர் ‘கிரகணம்’ படத்தில் கூட ஒரு மாடலாகவே வந்து சென்றார்.

அதன்பின் 8 தோட்டாக்கள் படத்தில் கொஞ்சம் நெகடிவ் சாயல் கலந்த ஒரு கேரக்டரில் நடித்த இவரைத்தேடி தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது

மீரா மிதுனின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து தேடி வந்த பல பட வாய்ப்புகள் இவருக்கு திருப்திகரமாக இல்லை. அதனால் தற்போது செலக்டிவாக சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மீரா மிதுன்.

2019ல் வெளியாக உள்ள அந்தப் படங்கள் திரையுலகிலும் தன்மீது மிகப்பெரிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்.

தேர்ந்தெடுக்கும் பாதை கதாநாயகியா? இல்லை குணச்சித்திர நடிகையா? என்ற கேள்விக்கே இவர் போக விரும்பவில்லையாம். காரணம் ஒரு பெண் நடிக்க வந்துவிட்டாலே அவள் கதாநாயகிதான் என்கிறார் மிரா மிதுன் செம போல்டாக..

கதையின் மையக்கருவாக அல்லது கதையின் திருப்பத்திற்கு வழிவகுக்கும் முக்கிய கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அதில் தனது நடிப்பை சிறப்பாக கொடுக்க வேண்டும் என்பதுதான் இவரது கோணம்..

சமீபத்தில் ஒரு நகை விளம்பரம் ஒன்றில் இவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருந்தது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் மீரா மிதுனோ, “மாடலிங் என்பது ஒரு கலை.. அதை அந்த கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும்..

இந்த புகைப்படத்தை எடுத்த பிரபல போட்டோகிராபர் கார்த்திக் சீனிவாசன் இதில் நடிக்குமாறு என்னை அணுகியபோது, நீங்கள் நடிக்காவிட்டால் நைஜீரியா அல்லது ஆப்பிரிக்கன் மாடலிங் ஒருவரைத்தான் இதில் நடிக்க வைக்க வேண்டும்.

ஆனால் இயல்பாகவே உங்களுக்கு அந்த உருவம் சரியாக பொருந்துகிறது.. என அவர் கூறிய பின்னர் அதைத் தட்டிக் கழிக்க எனக்கு மனம் வரவில்லை.

தவிர அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் என்னை பாராட்டவே செய்தார்கள் என் வீட்டினர் உட்பட” என கூறி எதிர்மறை விமர்சனங்களை புறந்தள்ளுகிறார் மீரா மிதுன்..

மாடலிங் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்தவே விரும்புகிறார் மீரா மிதுன்.. மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி அவ்வப்போது உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே அழைப்பு விடுத்திருக்கிறார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்ட மீரா மிதுன், லுக் டெஸ்ட், ஸ்கிரீன் டெஸ்ட் வரை சென்றுவிட்டார்.

ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கைகூடாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் த்ரிஷா என சமீபத்தில் தான் தெரியவந்ததாம் மீராவுக்கு.

அதேபோல கமல் தயாரிப்பில் ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன்..

அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு விலகிப்போனது.. விலகிப்போன வாய்ப்புகள் மீண்டும் வேறு வடிவத்தில், வேறு படங்களில் தன்னைத் தேடிவரும் என திடமாக நம்புகிறார் மீரா மிதுன்