இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் முதல் பார்வை வெளியானது!!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்” மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கிறது. “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை அதியன் ஆதிரை என்கிற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் பா.இரஞ்சித்திடம் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் ஆவார்.

கதாநாயகனாக தினேஷ் நடிக்கிறார். நாயகிகளாக அனேகா, ரித்விகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லிஜீஷ், முனீஸ்காந்த், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்கிறார்கள். இசையமைப்பாளராக தென்மா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். கலை இயக்குநராக தா.ராமலிங்கம் பணியாற்றுகிறார். பாடல்களைஉமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாகி இருக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது