பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசும் பட்டறை

பெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், ‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், ‘பட்டறை’ மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.

“நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்” என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.

அவர் மேலும் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.

ரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.

முகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.