பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது அக்டோபர் வெளியிடு

குயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார்.

ஐரோப்பவில் நடைபெற்ற இப்படங்களின் இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

தயாரிப்பாளர் மனுகுமரன், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிநாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களை கவரும்” என்றார்.

இப்படத்தின் துணை தயாரிப்பாளரும் கன்னடத்தில் உருவாகும் “பட்டர்ப்ளை” படத்தின் நாயகியுமான பருல்யாதவ் கூறுகையில், “இவ்வளவு பெரிய மற்றும் அரிய வகையான ஒரே நேரத்தில் நான்கு மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கும் திட்டத்தை வெற்றிக்கரமாக முடித்திருப்பது மிகவும் திருப்தியளிப்பதாகவுள்ளது” என்றார்.

அமித் திரிவேதி இந்த நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். குயீன் படத்திற்க்கும் இசையமைத்தவர் அமீத் திரிவேதி என்பது குறிப்பிடத்தக்கது. பாஸ்கோ – சீசர் மற்றும் கணேஷ் ஆச்சார்யா நடனம் அமைத்து கொடுத்துள்ளனர்.

அக்டோபர் மாதம் “பாரிஸ் பாரிஸ்”, “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, “பட்டர்ப்ளை”, “ஜாம் ஜாம்” படங்கள் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.