‘என் மகன் மகிழ்வன்’ ஹைதராபாத் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது

என் மகன் மகிழ்வன் (My Son is Gay) – ஓரின ஈர்ப்பை மையமாக வைத்து முதன்முதலாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ள முழுநீள திரைப்படம்.

சென்னையை சேர்ந்த திரைப்பட இயக்குனர் லோகேஷ் குமார் இயக்கத்தில் பிரபலநடிகர்களான அனுபமா குமார், கிஷோர், ஜெயபிரகாஷ் மற்றும் ஸ்ரீரஞ்சனி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு திரைக்கு வரவிருக்கும் நிலையில், ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, தமிழ் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்து கொண்டிருக்கிறது.

மெல்போர்ன், நியூயார்க், கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், பிலடெல்பியா நகரங்களில் நடந்தேறிய பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு,வெகுவாக மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வரிசையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இரண்டாவது இந்தியன் வேர்ல்ட் பிலிம் பெஸ்டிவலில் இப்படம் திரையிடப்பட்டது. துருக்கி, இஸ்தான்புல், அமெரிக்கா போன்ற பல நாடுகளை சேர்ந்த முக்கிய திரை பிரமுகர்களை நடுவர்களாக கொண்ட இந்த திரைப்படவிழாவில், இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் விருதுகளுக்கு போட்டியிட்ட நிலையில், லோகேஷ் இயக்கிய ‘என் மகன் மகிழ்வன்’ (My Son is Gay), சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு விருது அளிக்கப்பட்டது.

இயக்குனர் லோகேஷ் கூறுகையில்,இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான, ரஜினிஷ் கனுஜாவிற்கு நன்றி கூறினார். இது தங்களுடைய முழு திரைப்பட குழுவிற்கும் கிடைத்த வெற்றி எனவும், இந்த படத்தை இணைந்து தயாரித்து ஆரம்பத்திலிருந்தே தங்களுக்கு பக்கபலமாக இருந்து வரும் அணில் சக்சேனா மற்றும்சிரில் டி’சௌசா போன்றோரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விருது, படக்குழுவினருக்கு மேலான நம்பிக்கையையும், மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.