தியேட்டர்கள் அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்…!

கடந்த வெள்ளியன்று ‘6 அத்தியாயம்’ படம் வெளியானது.. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பினால் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார். இன்று ‘திரைப்பட இலக்கியச் சங்கமம்’ சார்பில் டிஸ்கவரி புக் பேலஸில் ‘6 அத்தியாயம்’ படக்குழுவினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின்போது இந்தப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். முன்னதாக நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

ஆறு இயக்குனர்கள், ஆறு அத்தியாயங்கள், எல்லா அத்தியாயங்களுக்கும் க்ளைமாக்ஸில் தனித்தனி முடிவு என உலக சினிமாவிலேயே ஒரு புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களை மட்டுமல்லாது திரையுலகினரிடையேயும் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தப்படத்தை தயாரித்தவரும், 2வது அத்தியாயமான ‘இனி தொடரும்’ அத்தியாயத்தை இயக்கியவருமான சங்கர் தியாகராஜன் இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ( 6 அத்தியாயம் பாகம்-2 )உருவாக்க இருக்கிறார். அதில் 6 புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவிருக்கிறார். மேலும் மிரமாண்டமான பொருட்ச்செலவில் ஒரு புதிய படத்தை தயாரித்து இயக்க இருக்கிறார்.

இந்தப்படத்தில் பணியாற்றிய ஆறு இயக்குனர்களுக்கும் தற்போது தனித்தனியாக படம் இயக்கும் வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.

இந்த ‘6 அத்தியாயம்’ படம் வெளியாவதற்கு முன்பே, இதில் ஆறாவதாக இடம்பெற்ற ‘சித்திரம் கொல்லுதடி’ அத்தியாயத்தை பார்த்துவிட்டு, அதை இயக்கியுள்ள ஸ்ரீதர் வெங்கடேசனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக இருக்கிறது.

இந்தப்படத்தில் முதல் அத்தியாயத்தை (சூப்பர் ஹீரோ) இயக்கிய கேபிள் சங்கர் ஏற்கனவே ஒரு பெரிய நிறுவனத்துடன் பெரிய பட்ஜெட்டில் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இந்தப்படத்தில் 5வது அத்தியாயத்தை (சூப் பாய் சுப்பிரமணி) இயக்கியுள்ள லோகேஷ் இன்று பிரபல தயாரிப்பாளர் ஒருவரை தனது புதிய படத்திற்காக சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மூன்றாவது அத்தியாயத்தை ( மிசை) இயக்கிய அஜயன் பாலா மற்றும் நான்காவது அத்தியாயத்தை (அனாமிகா) இயக்கிய சுரேஷ் ஆகியோரும் விரைவில் தங்களது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுகிறார்கள்.